free website hit counter

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் தெரிந்துவிடும். திருகோணமலையில் இன்று காலை 10 மணிக்கு கூடும் தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக வாக்களிப்பார்கள். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர், தேர்தலொன்றின் மூலம் தேர்வு செய்யப்படப் போகிறார் என்ற விடயம் வெளியானதும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பற்றிக்கொண்ட பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பொதுக்குழு உறுப்பினர்களின் நேரடி வாக்களிப்பு மூலம் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21ஆம் திகதி) நடைபெறும் தேர்தலில் வெற்றிபெறுபவர், வரும் 28ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார். கட்சி யாப்பின் பிரகாரம், அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கட்சியின் தலைவராக நீடிப்பார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தேர்தலின்றி பொது இணக்கப்பாட்டுடன் தேர்வு செய்வதற்கான முயற்சிகள்  பல கட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகள் எவையும் வெற்றிபெறாத நிலையில், தலைவருக்கான தேர்தலை தமிழரசுக் கட்சி நடத்தவிருக்கின்றது. 

பொது இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் கட்சியை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு உதவும் என்ற பொதுப்புத்தியின் கருத்தியலோடு இந்தப் பத்தியாளருக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அதுவும், தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள், இயக்கங்களில் தலைமைத்துவம் என்பது பெரும்பாலும் முதுசம் (பரம்பரைச் சொத்து) என்ற தோரணையில் பலரினாலும் கையாளப்படுகின்றது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈபிஆர்எல்எப், புளொட் தொடங்கி புதிதாக ஆரம்பிக்கும் கட்சிகள், இயக்கங்கள் வரையில் அதன் தலைவராக பொறுப்பேற்பவர், தன்னுடைய ஆயுட்காலம் பூராவும் தலைவராகவே இருக்க விரும்புகிறோர். தன்னுடைய காலத்துக்குப் பின்னும் தன்னுடைய குடும்பத்தார் தலைமைப் பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். இது, உட்கட்சி ஜனநாயகத்தை முற்றாக சிதைத்து, ஒருவரின் முழுமையான ஆளுகைக்குள் சென்று, கட்சியின் செயற்பாட்டை துருவநிலைப்படுத்தி மக்களிடம் இருந்து அந்நியப்படுத்திவிருகின்றது. அவ்வாறான சூழலில் கட்சியின் தலைவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்ய வேண்டும் என்ற சரத்தும், அதனை பொது இணக்கப்பாடு இல்லாத சூழலில் தேர்தல் மூலம் தெரிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விடயமும் தமிழரசுக் கட்சியின் யாப்பிலுள்ள ஜனநாயகத்தன்மையை பேணுவதற்கான காப்பாக கொள்ள முடியும். தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பிக்கும் போது, அந்தக் கட்சி ஒருபோதும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போன்று தனி ஒருவரின் ஆளுகைக்குள் சென்றுவிடக் கூடாது என்ற தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் நிகழ்ந்த முக்கிய ஜனநாயக  பாதுகாப்பாகும். தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான போட்டியில் கட்சியின் எந்த உறுப்பினரும் போட்டியிட முடியும். அவருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும். 

கட்சியின் தலைவர் ஒருவரை பொது இணக்கப்பாட்டுடன் தேர்வு செய்வது என்பது, அதிக நேரங்களில் கட்சியின் கடைக்கோடி உறுப்பினர்களதும் தொண்டர்களினதும் கருத்துக்களை உள்வாங்கி மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக, கட்சியில் யார் அதிக ஆளுகையைச் செலுத்துகிறார்களோ அந்த ஒருசிலர் எடுக்கும் முடிவாகும். அவர்கள் எடுக்கும் முடிவை மேலிருந்து கீழ் மட்டம் வரையில் திணிப்பார்கள். புதிய தலைவரும் கட்சியின் ஆளுகை வட்டத்துக்குள் இருந்து மட்டுமே தேர்வாகுவார். கட்சியின் தலைவருக்கும் கடைக்கோடி உறுப்பினருக்கும் அதிலிருந்து தெரிவாகும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் போதிய உரையாடல்களே நிகழ்ந்திருக்காது. தலைவராக வரும்போதே அவர்கள் கொம்பு முளைத்தவர்கள் மாதிரியே கட்சியின் இரண்டாம் மூன்றாம் மட்டங்களில் உள்ளவர்களை அணுகுவார்கள். தேர்தல் வாக்களிப்பு அப்படியான சூழலை கட்சிக்குள் உருவாக்காமல், தலைவர் தங்களினால் நேரடியாக தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற உணர்வு கட்சியின் தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்கும். அது, கட்சியையும், தலைமையும் இயல்பாக அணுகக்கூடியது என்ற நிலை சார்ந்ததுமாகும்.

புதிய தலைவரை தேர்தல் வாக்களிப்பின் மூலம் தேர்வு செய்வது, கட்சியைப் பிளவுபடுத்திவிடும் என்ற நிலைப்பாடு பலரிடம் காணப்படுகின்றது. ஆனால், ஜனநாயகம் என்பதே ஒவ்வொருவரது உணர்வுகள், முடிவுகளையும் மதிப்பதாகும். அப்படிப்பட்ட நிலையில், போட்டியில் இருக்கும் நபர்களை எடைபோட்டு சரியானவர் என்று நம்புபவர்களை தேர்வு செய்வது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். அதனைப் புரிந்து கொள்ளாது, தனக்கு உவப்பான நபர் வெற்றிபெறவில்லை என்பதற்காக கட்சியில் பிளவினை ஏற்படுத்துபவர்களை எந்தத் தருணத்திலும் பொறுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் ஒருபோதும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கவும் மாட்டார்கள். மாறாக, ஜனநாயக விரோத சிந்தனையுள்ளவர்களாகவே நோக்கப்படுவார்கள். மாற்றுக்கருத்துக்கள், கொள்கைகள் இருந்தாலும் மக்களின் வாக்களிப்பின் மூலம் தேர்வு செய்யப்படும் ஒருவரின் கௌரவத்தை காப்பாற்றுவதுதான் அரசியல் அடிப்படை. அப்படியான நிலையில், ஜனநாயக முறைப்படி தேர்வாகும் தலைவரை மதித்து, அவரின் கீழ் ஒருங்கிணைவதுதான் ஒழுங்கு. அந்த ஒழுங்குக்கு தயாராக இல்லாதவர்கள் குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அந்த மனநிலையோடு இருப்பவர்களிடம் அதிகாரம் சென்று சேரும் போது, அதிகார துஷ்பிரயோகம் என்பது தாராளமாக இடம்பெறும். அது, கட்சியை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்திவிடும். 

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆனால், போட்டி என்பது 'சுமந்திரன் எதிர் சிறீதரன்' என்ற இருமுனையாக திறந்திருக்கின்றது. யோகேஸ்வரன், தன்னுடைய ஆதரவு சிறீதரனுக்கு என்று அறிவித்துவிட்டார். அப்படியானால், அவர் ஏன் தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்ற கேள்வி எழலாம். அவர், சிறீதரனின் தலைமைத்துவத் தேர்வை உறுதிப்படுத்துவதற்கான உத்தியாக களமிறங்கியிருக்கிறார். சுமந்திரனின் ஆதரவாளர்களாக இருக்கும் தன்னுடைய அனுதாபிகளை சிறீதரன் பக்கத்துக்கு நகர்த்தும் திட்டங்களின் போக்கிலானதாகும். இது, ஆரம்பத்திலேயே அனைவரினாலும் உணர்ந்து கொள்ளப்பட்டது. தேர்தல்களில் மற்றவர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக அதிக தருணங்களில் டம்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவது வழக்கம். ஆனால் அப்படியானதொரு நிலைக்கு யோகேஸ்வரன் கீழிறங்கியமை வருத்தமானது. ஏனெனில், மட்டக்களப்பில் இருக்கும் தமிழரசின் மூத்த தலைவர்களில் யோகேஸ்வரன் முக்கியமானவர். மக்களால் தேர்வாகி பாராளுமன்றத்தில் இருந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் ஏன் டம்மி வேட்பாளர் ஆனார்? அவரை யார் இயக்கியது என்பதெல்லாம் தவிர்க்க முடியாத கேள்விகளாக தொடர்கின்றன. அவர், தனிப்பட்ட ரீதியில் சுமந்திரனின் வெற்றியை தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானத்துக்கு வந்திருந்தால், அது அவருடைய தனி உரிமைதான். ஆனால், அந்தத் தனி உரிமை தன்னை கடந்த காலங்களில் ஆதரித்து நின்றவர்கள் மீது மறைமுகமாக செலுத்தும் ஆதிக்கமாக கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. 

சுமந்திரனும் சிறீதரனும் தங்களின் வெற்றி தொடர்பில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். மூத்த தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல்குழுக் கூட்டத்திலும் பொது இணக்கப்பாட்டுடன் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அது வெற்றியளிக்கவில்லை. தேர்தல் மூலம் யார் தலைவராக தேர்வானாலும் அவரின் தலைமைத்துவத்தை மதித்து செயற்படுவதாக சுமந்திரனும் சிறீதரனும் தொடர்ச்சியாக கூறிவருகிறார்கள். தேர்தல் மூலம் தலைவரைத் தேர்தெடுப்பது கட்சியின் ஜனநாயகத்தை காக்கும் என்றும் அவர்கள் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்புக்களில் தெரிவிக்கிறார்கள். ஆனால், சிறீதரன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தன்னிடம் தலைமைத்துவத்தை தருமாறு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாத்திரமல்ல, சுமந்திரனை ஆதரிப்போர் என்று நம்புவோரிடமும் கேட்கிறார். சுமந்திரன் தலைமைத்துவப் போட்டியில் இருந்து விலகி தனக்கு இடமளிக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளரை தூது செல்லுமாறு சிறீதரன் கோரினார் என்ற விடயம் மேலே வந்திருக்கிறது. ஆனால், அதற்கு பொதுச் செயலாளர் உடன்படவில்லை.

தலைமைத்துவப் போட்டியில் வென்றால் தலைவராகுவது, இல்லையென்றால் தோற்றாலும் தனக்கான ஆதரவு நிலையை இந்தத் தேர்தலில் நிரூபிப்பதன் மூலம் தேசிய அமைப்பாளர் என்ற பதவியை பெறுவதுதான்  சிறீதரனின் நோக்கம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். தமிழரசுக் கட்சியில் தேசிய அமைப்பாளர் என்ற பதவிநிலை இல்லை. ஆனால், அவ்வாறான பதவியொன்றை தனக்கு வழங்க வேண்டும் என்று சிறீதரன் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்து கோரி வருகிறார். அதன்மூலம், வடக்கு கிழக்குப் பூராவும் தனக்கான ஆதரவாளர்கள் மட்டத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பது அவரது இலக்கு. அது,  எதிர்காலத்தில் தலைமைத்துவப் போட்டியில் இலகுவாக வெற்றிபெற உதவும். தலைமைத்துவ போட்டியில் வென்றாலும் தோற்றாலும் அந்த முயற்சிக்குப் பின்னால் ஆதாயம் என்ற நிலையில் சிறீதரன் இருக்கிறார்.

சுமந்திரனைப் பொறுத்தளவில் தலைமைத்துவ போட்டியில் தான் இலகுவாக வென்றுவிடலாம் என்றுதான் ஆம்பத்தில் இருந்து நம்பினார். அது, கடந்த பொதுத் தேர்தலில் தான் அதிக வாக்குகளைப் பெற்று வெல்வேன் என்று நம்பியதற்கு ஒப்பானது. ஏனெனில், ஒரு கட்டம் வரையில், அதாவது சிறீதரன் போட்டியில் இறுதிவரை உறுதியாக நிற்பார் என்று சுமந்திரன் நம்பவில்லை. ஒரு பேரம் பேசலுக்கான கட்டமாகவே சிறீதரன் இந்தத் தலைமைத்துவ தேர்தலை கையாள்கிறார் எனவே, ஒரு கட்டத்தில் சிறீதரன் தேர்தலில் இருந்து விலகி விடுவார் என்று சுமந்திரன் மாத்திரமல்ல, அவரது ஆதரவாளர்களும் நம்பினார்கள். ஆனால், போட்டி எதிர்பார்த்தைவிட கடுமையானது என்பது இப்போது அவருக்குப் புரிந்திருக்கும். தலைமைத்துவ தெரிவில் பொதுக்குழு உறுப்பினர்கள் மாத்திமல்ல, வெளித்தரப்புக்கள் தங்களது தலைமைகளை நீட்டி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும் அவர் உணரத் தொடங்கியிருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் இவ்வாறானதொரு சிக்கலை சுமந்திரன் எதிர்கொண்டார். வெளித்தரப்பினரின் பெருந்தொகைப் பணம் சுமந்திரனுக்கு எதிராக களத்தில் இறக்கப்பட்டது. அவரது கட்சியின் வேட்பாளர்கள் சிலரே, அதற்காக சோரம்போனதான குற்றச்சாட்டுக்கள் உண்டு. இம்முறையும் அவ்வாறான வெளித்தரப்புக்கள், சுமந்திரன் ஆதரவாளர்கள் என்று நம்பும் தரப்பினரை பணம் கொடுத்து வாங்க முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. 

அதிலும், கட்சியின் மாநாட்டினை நடத்துவதற்கு குறித்த வெளித்தரப்பினரிடம் பணம் பெறலாம் என்று அரசியல்குழு உறுப்பினர் ஒருவர் கூறிய விடயம் கவனத்துக்குரியது. எனினும் அவரின் பரிந்துரையை அரசியல்குழு ஆரம்பத்திலேயே புறந்தள்ளிவிட்டது. வெளித்தரப்பினரிடம் பணம்பெற்று கட்சியை அவர்களிடம் அடகு வைக்கும் நிலைக்கு தமிழரசுக் கட்சி போன்ற தமிழ் மக்களின் பிரதான கட்சி செல்வது என்பது சாபக்கேடானது. அந்தச் சிந்தனையைக் கொண்டிருப்பவர்களை கட்சியினரும் தொண்டர்களும் புறக்கணிப்பதுதான் சரியாக இருக்கும். 

சுமந்திரனுக்கு எதிராக மத அடையாள விசமப்பிரச்சாரமும் மூத்த அரசியல் ஆய்வாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் சிலரினாலும், அடிப்படைவாத மதக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இது, பௌத்த சிங்கள அடிப்படைவாதம் பரப்பும் பெரும்பான்மைவாதத்துக்கு ஒப்பானது. தமிழரசின் நிறுவனத் தலைவர் தந்தை செல்வா ஒரு கிறிஸ்தவர். அவருக்கு எதிராக நின்றவர்கள் பலரும் தங்களை பெரும் சைவர்களாக காட்டிக் கொண்டவர்கள். ஆனால், தமிழ் மக்கள் தங்களுக்கு யார் தலைவராக வேண்டும் என்பதை மத அடையாளங்கள் தாண்டி நின்று தேர்வு செய்தார்கள். அந்தத் தெளிவு தமிழ் மக்களிடம் இருக்கும் போது, தமிழரசின் தொண்டர்களிடம் இல்லாமல் இருக்காது. இவ்வாறான விடயங்களை பிரிவினையை வளர்க்கும் உத்தியாகவே இந்தப் பத்தியாளர் நோக்குகிறார். 

நாக்பூர் 'ஆர்.எஸ்.எஸ்' கொடுங்கரங்கள் வடக்குக் கிழக்கு பூராவும் படரத் தொடங்கியிருக்கின்றது. அந்தக் கரங்களினால் தின்று கொழுத்தவர்களும், அகப்பட்டவர்களும் மதப் பிரிவினையை தோற்றுவிப்பதில் கவனமாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருசில அரசியல் ஆய்வாளர்களும் இருப்பதுதான் ஏமாற்றமானது. ஏனெனில், அவர்கள் தங்களை சமூக நீதியின் காவலர்களாக ஒலிவாங்கிகளுக்கு முன்னால் தொடர்ச்சியாக காட்டிக் கொள்பவர்கள். பண முதலைகளில் தலையீடு, மதப் பிரிவினைவாத சக்திகளின் பிளவுபடுத்தும் உத்தி ஆகியவற்றைத் தாண்டியும்தான் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத் தேர்வு இடம்பெற வேண்டியிருக்கின்றது. 

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சியின் தலைமை என்பது, தவிர்க்க முடியாமல் ஆளுமைமிக்கது. புதிய தலைவராக யார் வரப்போகிறார் என்பதை ஏனைய கட்சிகளும் எதிர்நோக்கி இருக்கின்றன. சுமந்திரனோ, சிறீதரனோ யார் தலைவராக வந்தாலும், அது அவர்களுக்கு சற்று கடினமானதாகத்தான் இருக்கும். ஏனெனில் கடந்த காலத்தில் அவர்கள், மாவை சேனாதிராஜா என்ற தலைவரை இலகுவாக கையாண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், புதிய தலைமை அப்படியிருக்க வாய்ப்புக்கள் இல்லை. அதுபோக, புதிய தலைமை தன்னை தமிழ் மக்களின் பிரதான கட்சியின் தலைமையாகவே நிறுவி முன்நகரும். அது, கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் முதுகில் சவாரி செய்தவர்களுக்கு உவப்பானதாக இருக்காது. ஆனால், தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கு முன்னால் ஏகப்பட்ட கடப்பாடுகள் உண்டு. அது கட்சியைப் பாதுகாப்பது என்ற ஒற்றை நோக்கம் சார்ந்தது அல்ல. மாறாக, தமிழ்த் தேசிய அரசியலின் காப்பரணாக நின்று, தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு அர்ப்பணிப்போடு செயற்படுவதாகும். அதனை நோக்கிய சிந்தனையும் செயற்பாடும் அவசியமாகும். 

தோல்வி முகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு புதிய தலைமைத்துவத்தை நோக்கி நகரத் தயாராகியிருக்கிறது. தமிழர் தலைநகரான திருகோணமலையில் எதிர்வரும் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறும் தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டில் புதிய தலைவர் பதவியேற்பார். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோர் இம்முறை தலைமைப் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு நேரடி வாக்களிப்பின் ஊடாக புதிய தலைவரைத் தேர்தெடுக்கப் போகிறார்கள். அவ்வாறு தேர்வாகும் தலைவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கட்சியின் தலைவராக பதவி வகிப்பார். 

தந்தை செல்வா தலைமையில் 1949 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி, 1972 மே மாதம் 4ஆம் திகதி தமிழர் (ஐக்கிய) விடுதலைக் கூட்டணி தோற்றுவிக்கப்படும் வரையில், சுமார் 23 வருடங்கள் தனிக் கட்சி அடையாளத்தோடு இயங்கியது. தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டாகத்தான்  தமிழர் விடுதலைக் கூட்டணி  தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பிக்கப்பட்ட சில காலத்துக்குள்ளேயே மலையக அரசியல் கள நிலவரங்களைக் கருத்தில் கொண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டுவிட்டார். இன்னொரு பக்கம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பொன்னம்பலம் குடும்பத்தாரின் தனியாவர்த்தனத்தினால் அல்லாடத் தொடங்கிவிட்டது. இதனால், அந்தக் கட்சியின் மு.சிவசிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் இணைந்துவிட்டார்கள். கூட்டணி என்ற அடையாளம் இருந்தாலும் தமிழர் விடுதலைக் கூட்டணி, கட்சிக்குரிய யாப்பு வடிவங்களோடு இயங்கத் தொடங்கியது. அன்று முதல் தமிழரசுக் கட்சியின் பெயர் உறங்கு நிலைக்குச் சென்றுவிட்டது. ஏனெனில், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய நாமத்தில் இயங்கியது என்னவோ தமிழரசுக் கட்சிதான். அங்கு புதிதாக இணைந்தவர்கள் என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த ஒருசில தலைவர்களை மட்டுமே கொள்ள முடியும். 

கூட்டணி அடையாளத்துக்குள் தன்னை புகுத்திய தமிழரசுக் கட்சி 32 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் தன்னை மீட்டெடுத்துக் கொண்டது. கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருக்கும் வீ.ஆனந்தசங்கரி தரப்புக்கும், இரா.சம்பந்தன் தரப்புக்கும் இடையில் எழுந்த முறுகல்களை அடுத்துதான், தமிழரசுக் கட்சி மீட்டெடுக்கப்பட வேண்டி வந்தது. அதுவும், தமிழரசுக் கட்சியை மீட்டு மக்களிடம் பிரபலப்படுத்திக் கொடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகள். 2004 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக வீட்டுச் சின்னத்தை முன்மொழிந்ததும் இறுதி செய்ததும் விடுதலைப் புலிகள். அன்று கூட்டமைப்பில் இருந்தவர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தையும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வெளிச்ச வீட்டுச் சின்னத்தையும் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக முன்மொழிந்தார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் தந்தை செல்வாவின் அடையாளத்தோடு இருக்கும் வீட்டுச் சின்னத்தை மக்களிடம் மீண்டும் சேர்ப்பிக்கும் தீர்க்க(தரிசன)மான முடிவை எடுத்தார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னால் இருந்து பார்க்கும் போது, தமிழரசுக் கட்சியை புலிகள் மீட்டெடுத்தமையை அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது. 

தந்தை செல்வாவினால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி, விடுதலைப் புலிகளினால் மீட்டெடுக்கப்பட்ட கட்சி என்ற அடையாளங்களோடு இருக்கும் தமிழரசுக் கட்சி கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக படுமோசமான பின்னடைவுகளை நோக்கிச் சென்றது. அதற்கு, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், இளந்தலைவர்கள் என்று அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளில், தமிழரசுக் கட்சி மாத்திரமே அரசியல் கட்சிக்குரிய அனைத்துக் கட்டமைப்புக்களையும் கொண்டிருக்கின்றது. அதுபோல, ஒரு பிரதேசத்துக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் தமிழர் தாயகம் எங்கும் தன்னை விஸ்தரித்திருக்கின்றது. அப்படிப்பட்ட கட்சி 2015 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சந்தித்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2020 பொதுத் தேர்தல் என்ற இரு முக்கிய தேர்தல்களிலும் தோல்வி கண்டது. அந்தத் தோல்விக்கான காரணங்கள் அக்குவேறு ஆணிவேறாக ஆராயப்பட்டு விட்டன. அதில், பிரதானமானது கட்சிக்குள் அணி பிரித்து மோதி ஒருவரையொருவர் தோற்கடிக்க முனைந்தமையாகும். எந்தவொரு கட்சியும் தனக்குள் மோதிக்கொள்ள விரும்பாது, ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் கூச்சப்படும் அளவுக்கு தமிழரசுக் கட்சியினர் நடந்து கொண்டார்கள். 

இவ்வளவு பின்னடைவுகளுக்குப் பிறகும் தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழரசுக் கட்சிதான், முதன்மைக் கட்சியாக இருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் அதிகளவான வாக்குகளைப் பெற்ற கட்சி. அப்படியான நிலையில், அந்தக் கட்சி தன்னைப் பலப்படுத்திக் கொள்வது என்பது, தமிழ் மக்களின் ஆணையென்று கொள்ளப்பட வேண்டும். தமிழரசுக் கட்சி 2004 மீட்டெடுக்கப்பட்ட காலம் முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகள் சம்பந்தன் தலைவராக இருந்தார். அதில் முதல் ஐந்து ஆண்டுகள் அது ஒப்புக்கான பதவி மாத்திரமே. ஏனெனில், அப்போது தமிழர் அரசியலின் தீர்மானிக்கும் சக்தியாக விடுதலைப் புலிகளே இருந்தார்கள். 2009க்குப் பின்னரான காலத்தில் சம்பந்தன் தன்னை ஆளுமையான தலைவராக முன்னிறுத்தினார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியும் நடந்து கொண்டார். ஆனால், அவர், 2014இல் தமிழரசுக் கட்சி தலைமைப் பதவியை மாவை சேனாதிராஜாவிடம் கையளித்த விடயமே அந்தக் கட்சியை மோசமாக தோற்கடிக்கக் காரணமானது. கட்சித் தலைமைப் பொறுப்பை இன்னொருவரிடம் கையளிக்கும் போது, தான் சொல்வதையெல்லாம் கேட்கும் ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தை முன்னிறுத்திக் கொண்டு சம்பந்தன், மாவை சேனாதிராஜாவிடம் கைளித்திருக்கின்றார். அன்று  சம்பந்தன் எடுத்த சுயநல முடிவு, கட்சியை பாரிய சிக்கலுக்குள் சென்று சேர்த்தது. 

மாவை கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டாலும் அவரிடத்தில் முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அப்படி அவர் ஏதாவது முடிவுகளை அறிவித்தாலும் அதனை யாரும் கருத்தில் கொள்வதில்லை. தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடுகள் என்ன என்பது குறித்து சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் குரல்களே இறுதியானவையாக பார்க்கப்பட்டன. சம்பந்தன் வயது மூப்பினால் அல்லாடத் தொடங்கிய பின்னரும் கூட தமிழரசுக் கட்சியின் முகமாக மாவை யாரினாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏன், சொந்தக் கட்சியினரால்கூட ஏற்கப்படவில்லை. அப்படி ஏற்கப்பட்டால்தானே, தென் இலங்கையும் சர்வதேசமும் அவரை ஒரு தலைவராக கொள்ளும். பல தருணங்களில் மாவையை, அவருடைய தொகுதிக் கிளைக்குரிய தலைவராகவே பலரும் கருத்தில் கொண்டார்கள். இவ்வாறான நிலை நீடித்தால், கட்சி இன்னும் இன்னும் மோசமான பின்னடைவைக் காணும் என்பதை தமிழரசுக் கட்சியின் இளைய தலைமுறையும், நலன்விரும்பிகளும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். 

குறிப்பாக, 2020 பொதுத் தேர்தல் பின்னடைவுகளை அடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் அவசியமானது என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்தன. ஆனால், புதிய தலைவரைத் தேர்தெடுப்பதற்கான மாநாட்டினை நடத்துவதற்கே நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய மாநாட்டைக் கூட்டி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்சி யாப்பினைக் கொண்டிருக்கின்ற கட்சி, தேசிய மாநாடுகளை நடத்துவதையே, பல மத்திய குழுக் கூட்டங்களையும் அரசியல் குழுக் கூட்டங்களையும் கூட்டி அழுத்தங்களை வழங்கி நடத்த வேண்டி வந்திருக்கின்றது. அதற்கு, வயது மூப்பினால் அல்லாடினாலும் பரவாயில்லை தொடர்ந்தும் பதவி பகட்டோடு இருக்க வேண்டும் என்ற மாவையின் சுயநலம் மாத்திரமே காரணமாகும். 

எதிர்வரும் 27, 28ஆம் திகதிகளில் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, அதனை பிற்போடுவதற்கு மாவை சேனாதிராஜா தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு கூட்டாக அவர், சம்பந்தனின் பெயரை துணைக்கு அழைத்துக் கொள்கிறார். கட்சி மாநாட்டினை ஒத்திவைத்தால், கட்சியின் தலைவராக தான் தொடந்தும் இருக்கலாம் என்ற பேராசையைத் தாண்டி மாவை சேனாதிராஜா இதன்மூலம் என்னத்தை அடையப்போகிறார் என்று தெரியவில்லை. சம்பந்தன் போலவே, மாவையும் வயது மூப்பு தொல்லைகளினால் அவதிப்படுகிறார். ஆனாலும், அவருக்கு இன்னும் கட்சித் தலைமைப் பதவியை விட்டுவிலக துளியும் மனமில்லை.

கட்சியின் திருகோணமலை தொகுதிக் கிளைத் தெரிவு முறையாக நடைபெறவில்லை என்று தெரிவித்து சம்பந்தன் கடிதம் எழுதியிருப்பதான விடயம் மாவையினால் மீண்டும் மீண்டும் முன்கொண்டு வரப்படுகின்றது. ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தொகுதிக்கிளை தெரிவில் எந்தக் குழப்பங்களும் இல்லை என்று கடந்த மாத இறுதியில் திருகோணமலையில் கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் உறுதி செய்துவிட்டது. ஆனாபோதிலும், திரும்பவும் சம்பந்தனின் பெயரை முன்னிறுத்திய கடிதத்தைக் கொண்டு எப்படியாவது, திருகோணமலைத் தொகுதிக் கிளைத் தெரிவை காட்டி தேசிய மாநாட்டை ஒத்திவைக்கலாம் என்று மாவை தன்னுடைய இறுதி நேர ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரமும், அவர் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் தனக்கு இணக்கமானவர்கள் சிலரோடு கூடிப் பேசிவிட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடும் என்றிருக்கிறார். அங்குதான், தேசிய மாநாட்டினை நடத்துவதா இல்லையா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், மாவையின் கூற்றுக்களைப் புறந்தள்ளி கட்சியின் தேசிய மாநாடு அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடைபெறும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் சம்பந்தரின் பெயரில் அண்மைய நாட்களில் எழுதப்படுவதாக கூறப்படும் கடிதங்கள் தொடர்பில் சந்தேகம் நீடிக்கின்றது. வயது மூப்பு, மறதி உள்ளிட்ட காரணங்களினால் சம்பந்தன் அல்லற்படுகிறார். அதனைப்பயன்படுத்திக் கொண்டு, அவரின் பெயரில் வேறு நபர்கள் கடிதங்களை எழுதுகிறார்களா என்ற சந்தேகம்தான் அது.

பிறந்திருக்கும் 2024, தேர்தல் ஆண்டாக இருக்கப் போகிறது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி தன்னை பலப்படுத்த வேண்டியது அவசியமானது. தமிழ்த் தேசிய கட்சிகள் பலமிழக்கும் போது, பௌத்த சிங்கள பேரினவாதக் கட்சிகளும் அவற்றின் துணைக்குழுக்களும் தமிழர் தாயகப் பகுதிகளில் வாக்குகளை கபளீகரம் செய்கின்றன. இது, தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதித்துவத்தை  பாரியளவில் வீழ்ச்சியடைய வைக்கின்றது. அப்படிப்பட்ட சூழலில் தமிழரசுக் கட்சி ஆளுமையுள்ள புதிய தலைமைத்துவத்தின் கீழ் செல்வது தவிர்க்க முடியாதது. அது கட்சியை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் நம்பிக்கை கொள்ள வைக்கும்.தந்தை செல்வா தோற்றுவித்து, புலிகள் மீட்டெடுத்துக் கொடுத்த கட்சியை காலில் போட்டு மிதிக்கும் நிலைக்கு அந்தக் கட்சியினரே கொண்டு சேர்த்துவிட்டார்கள் என்ற வருத்தம் மக்களிடம் அதிகமாகவே உண்டு. அப்படிப்பட்ட நிலையில், அதனைக் கடந்து நம்பிக்கை பக்கங்களை அடைவது அவசியமானது. அந்தப் புள்ளியை தொடுவதற்கான பயணத்தை தலைமைத்துவ மாற்றத்திலிருந்துதாவது தமிழரசுக் கட்சி ஆரம்பிக்க வேண்டும். 

தேர்தல் ஆண்டொன்று பிறந்திருக்கின்றது. 2024 பிறப்பை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கின்றது. இலங்கை, இந்தியா, அமெரிக்கா என்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. தேர்தலுக்கான அறிவிப்புக்கள் புதிய தலைமைகளை,கூட்டணிகளை மக்களிடம் அறிமுகம் செய்யும். ஏற்கனவே பல தடவைகள் ஆட்சியாளர்களினால் ஏமாற்றப்பட்டிருந்தாலும் புதிதாக வரும் ஆட்சியாளர்கள் தங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என்று மக்கள் சிறிதாக நம்பிக்கை கொள்வார்கள். தேர்தலுக்கு அப்படியொரு அசாத்திய வல்லமை உண்டு. இலங்கை மக்கள் இந்த ஆண்டு  ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்ற இரு தேர்தல்களைச் சந்திக்கப் போகிறார்கள். 

தேர்தல்களுக்கு புதிய நம்பிக்கையை மக்களிடம் விதைக்கும் ஆற்றல் உண்டு. எனினும் இலங்கையைப் பொறுத்தளவில் இம்முறை தேர்தல்கள் மக்களிடம் எந்தவித நம்பிக்கையையும் விதைக்கும் சாத்தியப்பாடுகளைக் காண்பிக்கவில்லை. புதிய ஆண்டு பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பை மக்களிடம் திணித்துக் கொண்டு பிறந்திருக்கின்றது. அது, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடங்கி, அனைத்து பக்கங்களிலும் நெருக்கடியை திறந்து விட்டிருக்கின்றது. தேர்தல்களில் வெற்றிபெற்று யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பெரிதாக மீட்சியில்லை என்ற உணர்நிலை மக்களிடம் உண்டு. ஆனால், அரசியல்வாதிகள் ஒருபோதும் மாறுவதில்லை. அவர்களின் ஒற்றை இலக்கு எப்படியாவது அதிகாரத்தை அடைந்துவிட வேண்டும். அதற்காக என்னமாதியான வேடத்தைத் தரித்துக் கொண்டு அரங்காற்றுகைக்கு தயாராக இருப்பார்கள்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பித்த ராஜபக்ஷ எதிர் 'இன்னொரு தரப்பு' என்ற கட்டத்தை நாடு இன்னமும் தாண்டவில்லை. வரப்போகும் தேர்தல்களும் ராஜபக்ஷக்களை ஆதரிக்கும் தரப்புக்கும் எதிரான தரப்புக்கும் எதிரான மோதலாகவே இருக்கும். வழக்கமாக ராஜபக்ஷக்கள் தரப்பில் ராஜபக்ஷ சகோதரர்கள் யாராவது அதிகாரத்துக்காக போட்டியிடுவார்கள். ஆனால், இம்முறை அந்த இடத்தில் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு பதிலாக அவர்களின் சார்பில் ரணில் விக்ரமசிங்க இருக்கப் போகிறார். ஆக, ராஜபக்ஷக்களின் ரணில் எதிர் சஜித் பிரேமதாச என்ற நிலையே ஜனாதிபதித் தேர்தல் பிரதிபலிக்கப் போகின்றது.

2005 ஜனாதிபதித் தேர்தலில் புறக்கணிப்பு கோசத்தை முன்வைத்து தமிழ் மக்கள் ராஜபக்ஷக்களின் வெற்றிக்கு பெருவாரியாக உதவினார்கள். அதற்காக தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகமானது. முள்ளிவாய்க்கால் கரையின் கொடூர முடிவு வரை கொண்டு சென்றது. அதற்குப் பின்னரான காலத்தில், தென் இலங்கை  மக்கள் ராஜபக்ஷ ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அதிகமான தருணங்களில் நின்றிருக்கிறார்கள். 2015 ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், 2022 அரகலய (போராட்டம்) என்ற மூன்று தருணங்களைத் தாண்டி ராஜபக்ஷக்களுடனேயே தென் இலங்கை மக்கள் நின்றிருக்கிறார்கள். ஆனால், 2005 ஜனாதிபதித் தேர்தலில்  கையைச் சுட்டுக் கொண்டதன் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் ராஜபக்ஷக்களுக்கு எதிரானது என்ற நிலையில் துருவப்பட்டது. இன்றைக்கும் ராஜபக்ஷக்களின் ஆதரவோடு தேர்தலில் யார் களம் கண்டாலும் அவர்களுக்கு எதிராகவோ தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். அதனை இப்போதைக்கு மாற்ற முடியாது.

தமிழ்நாட்டு அரசியல் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆதரவு, எதிர் என்ற புள்ளியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக அதிக காலம் ஆட்சியை தக்க வைத்திருக்கின்றது. ஆனாலும் திமுக ஆதரவு, எதிர் நிலை என்பதுதான் தமிழக அரசியல் களம். அதுபோலத்தான், ராஜபக்ஷக்களின் அரசியல் நீடிக்கும் வரையில், தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எதிர்நிலை என்பது இயல்பானதாக இருக்கும். இந்த அடிப்படைப் புள்ளியை மறந்து நின்று யாராலும் அடுத்த கட்டங்களைச் சிந்திக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரங்கில் அல்லாடிக் கொண்டிருக்கும் கட்சிகளும் தவிர்ந்த முடியாமல் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நிலைப்பாடு என்ற கட்டத்தில் இருந்து வெளிப்படையாக மாற முடியாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ரணில் எதிர் சஜித் என்ற துருவப்பட்டு நின்கின்ற நிலையில், ரணிலின் நட்புப் பட்டியலில் இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் சிலவும் அதன் முக்கியஸ்தர்களும் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் கடந்த காலத்தில் ரணிலிடம் தனிப்பட்ட ரீதியில் ஆதாயங்களைப் பெற்றவர்கள் அதிகமுண்டு. பினாமிகளின் பெயர்களில் மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் தொடங்கி, நிதி மூலங்கள் வரையில் ரணிலிடம் ஆதாயம் பெற்ற முதலைகள் தமிழ்த் தேசிய அரசியலில் உலவுகின்றன. அப்படியான தரப்பினருக்கு ரணிலின் வெற்றி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், ரணில் ராஜபக்ஷக்களின் முகமாக தேர்தல் களத்தில் வரவிருக்கும் நிலையில், ரணிலுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்க முடியாது. அப்படியான நிலையில், ரணிலை எப்படி காப்பாற்றுவது என்பதற்கான திட்டங்களை மெல்ல அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் முக்கியமானவை, தேர்தல் புறப்பணிப்பு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற இரு விடயங்கள்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக எழுந்தது. அது, ஒருபோதும் தென் இலங்கை அரசியல்வாதிகள் மீது முழுமையான நம்பிக்கையைக் கொண்டதில்லை. ஆனால், அரசியல் என்பது சந்தர்ப்பங்களை சமயோசிதமாக கையாளுதல் என்ற போக்கில் தென் இலங்கையின் அரசியலோடு சில தருணங்களில் சில இணக்கப்பாடுகளைக் கண்டிருக்கின்றது. அது எதிர்வரும் காலத்திலும் தொடரலாம். ஆனால், தமிழ் மக்களின் உணர்நிலை என்பது பெரும்பாலும் ஒரே புள்ளியில் திரளும் போது அதற்கு எதிரான களத்தை யார் திறந்தாலும் அவர்களின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் தேவை உண்டு. ஏனெனில், மக்களின் உணர்வுகளுக்கு எதிரான பக்கம் செல்லும் தரப்பினர், அதற்கான காரணத்தை மக்களிடம் தெளிவுபடுத்தி அவர்களை தங்களின் பின்னால் அழைத்துச் செல்ல முடியவில்லை என்றால், அந்த முடிவு மக்கள் விரோதமானது. ஜனநாயக ரீதியாக யாருக்கும் எந்த அரசியல்நிலைப்பாட்டின் பக்கத்திலும் செல்லும் உரிமை உண்டு. ஆனால், மக்கள் நிராகரிக்கும் பக்கத்தில் நின்று கொண்டு அந்த மக்களின் அரசியலைப் பேசுவதாக காட்டிக் கொள்ள முடியாது.

2005 ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு கோசத்தினால் நிகழ்ந்த விளைவுகளை அடுத்து, தமிழ்ச் சூழலில் யார் தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தை எடுத்து வந்தாலும் அவர்களை சந்தேகத்தோடுதான் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். புறக்கணிப்பு கோசத்தோடு வரும் தரப்பினர் ராஜபக்ஷக்களுக்காக வேலை செய்கிறார்கள் என்கிற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்துவிடுகிறார்கள். அதனால்தான், தமிழ்த் தேசிய அரசியலில் பிரதான கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சியும், ஒருகாலத்தில் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் புறக்கணிப்பு கோசத்தினை முன்வைப்பதில்லை. 2009 கோர முடிவுகளின் பங்காளிகளில் ஒருவரான சரத் பொன்சேகாவை 2010 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக ஆதரிப்பதற்கும் காரணமானது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களை வீழ்த்த முடியும் என்ற நிலையில், தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தோடு வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அதே ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் மோசமாக தோற்கடித்தார்கள். ஒரு கட்டம் வரையில், முன்னணியினர், ராஜபக்ஷக்களின் துணைக்குழுவினர் என்ற ரீதியில் தமிழ் மக்களில் ஒருபகுதியினர் நம்பினர்.

இம்முறையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், வழக்கமாக ராஜபக்ஷக்களுக்கு எதிரான அணியில் இருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈ.பி.ஆர்.எல்.எப் என்பன தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறன. இந்த முடிவு, தமிழ் மக்களை தென் இலங்கை அரசியல் கட்சிகளும் தலைமைகளும் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதனால் எடுக்கப்பட்டது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் இணைந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளராக அவர் மேற்கண்ட அறிவித்தலை கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில் விடுத்தார். தென் இலங்கை அரசியல் கட்சிகளும் தலைமைகளும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றன என்பது நிராகரிக்க முடியாத வாதம். ஆனால், அந்த வாதம், தமிழ் மக்களை கடந்த காலத்தில் மிகமோசமாக தோற்கடித்த தரப்பின் வெற்றிக்கு உதவும் என்று தெரிந்தால், அதனைத் தவிர்ப்பதுதான் சமயோசிதம். அதற்குப் பெயர்தான் அரசியல்.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை வழக்கமாக புலம்பெயர் தரப்புக்கள் சிலவும் எம்.கே.சிவாஜிலிங்கமும்தான் வழக்கமாக முன்கொண்டு வருவார்கள். ஆனால், இம்முறை அந்த விடயத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் முன்னொழிந்திருக்கிறார்கள் என்பது பல கேள்விகளை எழுப்ப வைக்கின்றது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் இருக்கும் புளோட் இயக்கத்தினர் கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் நெருக்கமாக இயங்கிய தரப்பினர். குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முடிவு காலங்களில் கோட்டபாய ராஜபக்ஷவுடன் தர்மலிங்கம் சித்தார்த்தன் நெருக்கமாக இருந்தார். புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவை கொண்டாடுவதைக் காண முடியும். அப்படியான நிலையில், புளொட் ராஜபக்ஷக்களின் வெற்றிக்காக அல்லற்படுவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், ரெலோவும் ஈபிஆர்எல்எப்பும் ஏன் அந்த முடிவின் பக்கத்தில் நின்கின்றன என்ற விடயத்தை மக்கள் ஆராயும் கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.

ரணிலின் வெற்றியை உறுதி செய்யும் ஆர்வத்தில் ரெலோவும் ஈபிஆர்எல்எப்பும் இருக்கின்றனவா என்பது அந்தக் கேள்வி? ஏனெனில் அந்தக் கேள்வியின் பின்னால் வவுனியாவின் மக்களின் எதிர்ப்பை மீறி சீனித் தொழிற்சாலையை அமைக்கும் விடயத்தில் செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேந்திரன் ஆகியோர் காட்டிய ஆர்வத்தை கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏற்கனவே, ரெலோ இயக்கத்துக்குள் இதற்காக செல்வமும் சுரேனும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், பலமுறை தமிழ் மக்களினால் நிராகரக்கப்பட்ட சீனித் தொழிற்சாலையை பொய் நிறுவனம், முகவரி, அலுவலகம் என்ற அடையாளங்களோடு செல்வமும், சுரேனும் யாருக்காக அமைக்க முயன்றார்கள் என்ற சந்தேகம் இருக்கின்றது. அதற்காக, ரணிலின் ஆசிர்வாதம் அவர்களுக்கு முழுமையாக இருந்தது. அப்படியானால், அதற்கான நன்றி விசுவாசத்தின் விளைவா தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது எழும் சந்தேகங்களில் ஒன்று. இப்படி நிறையை விடயங்களை வைத்து தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை பேசலாம். தேர்தல் வரும் போது இவ்வாறான நிறைய விடயங்கள் பேசப்படலாம்.

இன்னொரு பக்கம் கடந்த ஒரு வருடகாலமாக ரணிலோடு மிக நெருக்கமாக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்...' என்ற கட்டத்திற்கு வந்திருப்பதாக காட்டிக் கொள்கின்றார். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ரணில் முழுமையாக அமுல்படுத்துவார். அதற்கான ஒத்துழைப்பை தமிழ்க் கட்சிகள் வழங்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் வரையில், விக்னேஸ்வரன் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், அண்மையில் தமிழ்க் கட்சிகளுடன் ரணில் நடத்திய சந்திப்பை புறக்கணித்த விக்னேஸ்வரன், கடந்த காலத்தில் தனக்கு அளித்த வாக்குறுதிகளை ரணில் நிறைவேற்றவில்லை. அதனால், அவருடனான சந்திப்பை புறக்கணிப்பதாக அறிவித்தார். அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பை இரண்டு விதமாக நோக்கலாம். முதலாவது, அவர் இன்னமும் முன்பள்ளி பருவ அரசியல்வாதியாக இருக்கிறார் என்பது. இரண்டவாது, மிக முக்கியமானது, ரணிலையும் தன்னையும் அரசியலில் காப்பாற்றும் உத்தி.

ரணிலோடு அண்மையாக நாட்கள் வரையில் நெருக்கமாக இருந்த விக்னேஸ்வரன், திடீரென அவரில் நம்பிக்கை இல்லை என்று கூறுவதன் பின்னால் எழும் சந்தேகங்கள் முக்கியமானவை. ராஜபக்ஷக்கள் ஆதரவளித்தாலும் ரணில் வெற்றி என்பது கேள்விக்குரியது. தமிழ் மக்கள் வாக்களிப்பைத் தவிர்த்தால், ரணிலின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். அதனால், ராஜபக்ஷக்களுக்கு (ரணிலுக்கு) எதிராக திரளும் தமிழ் வாக்குகள் ஒருபோதும் சஜித்துக்கு சென்று விடக் கூடாது என்ற நோக்கில், திசைதிருப்பல் நாடகத்தை விக்னேஸ்வரன் ஆரம்பித்திருக்கிறாரோ என்ற விடயம் மேலெழுகின்றது. அதிலும் குறிப்பாக, தமிழ்ப் பொது வேட்பாளராக தான் போட்டியிடுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு காய்களை அடிக்க அவர் நினைக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் முன்மொழிந்தாலும் அங்குள்ளவர்களில் யாரும் வேட்பாளர்களாக மாட்டார்கள். அப்படியான நிலையில், அந்த வேட்பாளர் நிலைக்கு தான் நகர்ந்தால், அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தலுக்கான கூட்டொன்றை அமைத்துக் கொள்ள முடியும் என்பதும் அவரது எதிர்பார்ப்பு. அப்படி அமைந்தால், அடுத்த பொதுத் தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று விக்னேஸ்வரன் நினைக்கலாம். தற்போதுள்ள நிலையில், விக்னேஸ்வரனுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது இல்லவே இல்லை. அவரின் பின்னால் உள்ளவர்களில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனைத் தவிர யாரும் வாக்குச் சேர்க்கும் வல்லமையுள்ளவர்கள் இல்லை. அதனால், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற அரங்கைத் திறந்து அதில், ஆதாயம் தேட அவர் முனைகிறார் என்று கருத வேண்டியிருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தேர்தல்களை எதிர்காலத்தில் தங்கள் சந்திக்கப் போகும் பாரிய நெருக்கடிகளின் அளவை குறைக்கும் கருவியாகவே கொள்கிறார்கள். அதன்போக்கில்தான், அடுத்து வரும் தேர்தல்களையும் கொள்வார்கள். மற்றப்படி, தேர்தல் புறக்கணிப்பு கோசத்தின் பின்னாலோ, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு பின்னாலோ செல்லும் வாய்ப்புக்கள் இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னால் மக்களின் உணர்நிலைகளுக்கு பின்னாலேயே தமிழ்த் தேசிய அரசியல் இயங்கியிருக்கின்றது. அதற்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கமாக அரசியல் கட்சிகளும் தலைமைகளுமே மக்களை வழிப்படுத்தும். ஆனால்,விடுதலைப் புலிகளின் முடிவுக்குப் பின்னர் ஈழத் தமிழ்ச் சூழலில் அது மறுவளமாக நடைபெற்று வருகின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல் ஆடப்படும் அரங்குகளை மக்கள் ஒருபோதும் கண்டு கொள்வதில்லை. 

 

விடயம் ஒன்று,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கற்கைநெறிகள் ஆங்கில மொழி மூலம் இடம்பெற்று வருவது தொடர்பில் சில தரப்புக்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பத் தொடங்கியிருக்கின்றன. ஆங்கில மொழி மூல கற்கைநெறிகள் தொடர்வதால் யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மாணவர்களின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடருமானால் சிங்கள மயமாக்கல் தமிழர் தாயகத்தில் இன்னும் வேகப்படும் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

தமிழ் அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் பரப்பு கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான நம்பிக்கையான முயற்சிகளையோ மாற்றங்களையோ காட்டாமல் வெறுமையால் நிரம்பியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளில் இருந்து சற்று வேகமாகவே மீண்டெழுவது தொடர்பிலான ஆக்ரோசத்தை தமிழ்ச் சமூகம் வெளிக்காட்டினாலும், அதனை நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்த வேண்டிய அரசியல் தரப்புக்களும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. அதனால், தமிழ்ச் சமூகம் பிளவுண்டது மாத்திரமன்றி, தவறான பக்கங்களை நோக்கிய விரைவாக ஓடத் தொடங்கியிருக்கின்றது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து கவனம் பெற்றிருக்கின்றது. சம்பந்தன் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பினால் உடலளவில் பெரிதும் தளர்ந்துவிட்டார். அவரினால் வெளியிடங்களுக்கு பயணிக்க முடியவில்லை. பாராளுமன்றத்துக்கான வருகை என்பது கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பதை இன்னொருவர் கேட்டு சொல்லும் நிலை இருக்கிறது. 

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction