free website hit counter

பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள் என்ன..?

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (27.05.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியப் பிரதமர் அவர்கள் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து

மேலும், மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வான்வழி அமைப்பு மையம்

மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மேகதாது அணை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி அவர்கள் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், மாண்பமை சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்தியப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும், 2026ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், இந்திய பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: