தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 27) சந்தித்தார்.
புதியதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்தார். ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமருடனான முதல் சந்திப்பு இது.
இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதிக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் விஜய் வழங்கியுள்ளார்.
இரு நாள் அரசுமுறைப் பயணமாக தில்லிக்கு சென்ற முதல்வர் விஜய்க்கு, தில்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்ற விஜய்க்கு, தில்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் சம்பிரதாயப்படி அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமா் மோடியை முதல்வர் விஜய் இன்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்டவை குறித்தும், தமிழகத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இரு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு சிக்கிம் சென்றுள்ளதால் மே 28-ஆம் தேதி அவர் தில்லி திரும்பிய பிறகு முதல்வர் விஜய் அவரை சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது. இந்தப் பயணத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
