free website hit counter

முதல்வர் விஜய் மேஜையில்... சமூக ஊடகங்களில் விவாதப்பொருளான புனித சிலுவை!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இணையதளம் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் ஜோசப் விஜய் நேற்று வெளியிட்ட விடியோ ஒன்றில், அவரது மேஜையிலுள்ள புனித சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து சிலை, சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில், இணையவழியில், தன்னுடைய விவரங்களை முதல்வர் ஜோசப் விஜய் பதிவு செய்து அது குறித்த விடியோவை நேற்று பகிர்ந்திருந்தார். இது வெறும் எண்ணிக்கை அல்ல, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான். எல்லா திட்டங்களுக்குமான அடிப்படை. எனவே ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுக்க வேண்டும். நான் பதிவு செய்துள்ளேன் என்று முதல்வர் பதிவிட்டிருந்தார்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதல்வர் விஜய் வெளியிட்ட விடியோவில், அவரது மேஜையில் புனித சிலுவை இருப்பது பதிவாகியிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த குறியீடுகளையோ, சுவாமி படங்களையோ வைக்கக் கூடாது என்று ஒரு தரப்பும், தன்னுடைய மேஜையில், தான் வணங்கும் புனித சிலுவையை யாருக்கும் தொந்தரவில்லாமல் வைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று மற்றொரு தரப்பும் சொற் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விவாதம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், முதல்வர் ஜோசப் விஜய் தன்னுடைய மேஜையில், சிறிய இயேசு கிறிஸ்து சிலை ஒன்றை வைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. முதல்வர் அறையில் உள்ள சுவரில் பெரிதாக வைத்து அலங்கரிக்கவோ, தன்னுடைய நம்பிக்கையை பிரமாண்டமாக வெளிப்படுத்தவோ இல்லை. புனித சிலுவை மிகச் சிறியதாக, கவனத்தை ஈர்க்கும் வகையில் இல்லாமல், மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மேஜையில் புனித சிலுவையை வைத்திருப்பது, தான் சிறப்பாக பணியாற்ற உதவும் என்று அவர் நம்பினால், அது அங்கேயே இருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த விவாதத்தில், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முதல்வர் அலுவலகத்தில், சுவாமி படங்களை வைத்திருந்த புகைப்படங்களையும் சிலர் பகிர்ந்து இது தவறில்லையா? என்று கேள்விகளை எழுப்பி முதல்வர் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

யாருக்கும் எந்த அச்சுறுத்தலையும் துன்புறுத்தலையும் செய்யாமல், ஒருவர் தன்னுடைய மத நம்பிக்கையைப் பின்பற்றலாம், தொடரலாம், அது மற்றவர்கள் மீது ஏதேனும் வகையில் அழுத்தம் கொடுப்பதாகவோ, கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தால் மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பதே பரவலாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருப்பவர்களின் கருத்தாக உள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula