நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான தவெகவின் தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மேலும் இரு புதியவர்கள் இன்று அமைச்சர்களாக, ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
மே 10 ம் திகதி தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் பொறுப்பேற்றபோது அவருடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, நேற்று 21ந் திகதி, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது மேலும் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்தனர்.
இந்நிலையில், மேலும் இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றதுடன் தமிழக சட்டசபையின் அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
தவெகவின் சட்ட மன்ற உறுப்பினர்களுடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேரும், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் புதிய அமைச்சரைவயில் பங்கேற்றனர். இதன் மூலம் தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்த ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனும் கொள்கையடிப்படையில், தமக்கு ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தமது அமைச்சரவையில் பங்குகொள்ள வழிசெய்துள்ளது.