தமிழகத்தில் பிளவுகள் அதிகம் காணப்படும் கட்சியாக அதிமுக உள்ளது.
ஒற்றை தலைமை, சசிகலா வருகை, முன்னாள் அமைச்சர்கள் மீதான வருமான வரி சோதனை உள்ளிட்டவை அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் சமீபத்தித்தில் நடந்த டெல்லி பயணம் பெரிய அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மீது அதிமுக தனது கவனத்தை திருப்பியுள்ளது.
கட்சியின் மேல்மட்ட அளவிலான நெருக்கடிகளை சமாளிக்க பாஜகவின் உதவியை அதிமுக தலைமை எதிர்பார்ப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதனால் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்க முடியாமல் அதிமுக தலைமை கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மூத்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் சம்பந்தப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்களே கூட்டணியை முடிவு செய்வது மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் அதிகாரம் வழங்குவது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.