தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு அலுவலகங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்ற கேள்வி பலர் மத்தியில் உள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதிலிருந்து அரசு ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வழங்கி வருகிறார். அந்த வகையில் அரசு அலுவலகங்களை முறையாக பராமரிக்க வேண்டும், சுகாதாரம் பேண வேண்டும் என ஒரு கடிதம் எழுதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.
அதில் “அரசு அலுவலகங்களில் பயனற்ற நாற்காலிகளை அப்புறப்படுத்த வேண்டும். உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அகற்றி தனி அறையில் வைக்க வேண்டும். திகதிகள் முடிவடைந்த கடந்தாண்டு பதிவேடுகளை அப்புறப்படுத்தி பராமரிக்க வேண்டும். மேலும் மேசையின் மீது கோப்புகளை களையாத வண்ணம் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும். பழுதடைந்த பயன்பாட்டில் இல்லாத கணனிகளை சரி செய்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.கொரோனா தொற்று விரைவாக பரவி வருவதால் அரசு அலுவலகங்களில் சுகாதாரம் பேணுதல் அவசியமாகும்.
அவ்வப்போது வளாகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். மேலும் தூய்மை பணியாளர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்து துர்நாற்றமின்றி பராமரிக்க வேண்டும். தூய்மையான அலுவலகம், நம் அலுவலகத்தை நேசிக்க தகுந்ததாக மாற்றும். நம் பணியைத் தென்றலாக்கும்” என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
தலைமைச் செயலாளரின் இந்த அறிவுறுத்தல்கள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.