free website hit counter

நீரிழிவு நோய் வருமென்ற பயமா? பலனளிக்கிறது பஸ்சிமோத்தாசனம்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று உலக நீரிழிவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் உள்ள அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக இருக்கும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் அனைவரும் பெறவேண்டும் எனும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் திகதி உலக நீரிழிவு நாளாக நினைவுகொள்ள அறிவிக்கப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் பலரையும் பாதித்திருக்கிறது. பலர் இன்னும் இந்த இதற்கு ஆட்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர். இந்திய இளைய சமுதாயத்தில் 4 சதவீதம் பேர் நீரிழிவு குறைபாட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் தான் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் இன்று வரை தீர்மானமாக எந்த முடிவுக்கும் மருத்துவ உலகம் வர இயலவில்லை. நீரிழிவு நோயா அல்லது உடலின் ஒரு குறைபாடா என்றால் அது நோயல்ல, குறைபாடு என்பதே உண்மை.

பிறவி ஊனம் மட்டுமே குணப்படுத்த முடியாதது என்பர். ஆனால் நீரிழிவு என்பதை பொறுத்த மட்டில் பெரும்பாலோருக்கு இடையில் வரும் ஒரு ஊனம். ஆக, இந்த ஊனம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும். அதற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுப்பது யோகாசனங்கள் தான். அதிலும் குறிப்பாக யோகாசனங்களில் பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுக்கிறது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்று கூறலாம்.
செய்யும் விதம்

முதல் நிலை

விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்தாற் போல் நீட்டி வைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளை காதுகளை ஒட்டினாற் போல் தலைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ளவும். கைவிரல்கள் சேர்ந்திருக்க வேண்டும்.
இப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். இப்போது கைகள் காதுகளை விட்டு விலகாதபடி மூச்சைப் பிடித்து எழுந்து உட்காரவும். இது தான் முதல்படி நிலை.

இரண்டாவது நிலை

இப்போது மூச்சை விட்டபடியே முன்னுக்கு குனிந்து கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரல், நடுவிரல் இவை இரண்டையும் கொக்கி போல் மடக்கி பிடித்துக் கொள்ளவும். இது இரண்டாவது நிலை.

மூன்றாவது நிலை

இந்த நிலையில் மூச்சை ஒரு தரம் இழுத்து விட்டவாறே இன்னமும் கீழே குனிந்து முழங்கைகள் முட்டிக்கால்களை ஒட்டி தரையை தொட்டவாறு இருக்கும் படியான நிலைக்கு வரவும். அதாவது முகத்தை முழங்கால்களின் சந்து வரை எட்டிக் குனியவும். மடக்கின் முழங்கைகள் தரையில் படவேண்டும். இந்த நிலையில் ஐந்து முதல் பத்து எண்ணும் வரை இருக்கலாம். பின்னர் கைகள் மட்டும் கால்கள் இரண்டின் பெருவிரல்களை மட்டும் பிடித்திருக்கும் படியான நிலைக்கு நிமிர்ந்து வரவும்.
இதற்கடுத்து கைகள் இரண்டையும் முதல்நிலையில் சொன்னது போல் காதுகளை ஒட்டியிருக்கும் படியான நிலையில் வைத்து நிமிர்ந்து உட்காரவும். பின்னர் உடலை சிறிது சிறிதாக பின்னோக்கி சாய்ந்து படுக்கை நிலைக்கு வரலாம். இப்போது மூச்சை இறுக்கிப் பிடிக்காமல் சாதாரண நிலையில் விட்டு வரவும்.
இவ்வாறு செய்து முடிப்பது ஒரு பஸ்சிமோத்தாசனம் ஆகும். இது போல் மூன்று முதல் நான்கு முறை செய்யலாம்.

ஏற்படும் சிரமங்கள்

சிலருக்கு ஆரம்ப நிலையில் படுத்து எழுந்திருப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். கைகளை தரையில் ஊன்றினால் தான் எழுந்திருக்கவே முடியும் என்ற அளவில் இருப்பார்கள். ஆசனங்களை செய்ய முயற்சிக்கும் தொடக்க காலங்களில் இது போல் அசவுகரியங்கள் எழுந்தால் மனம் தளரக்கூடாது. தரையில் கைகளை ஊன்றித்தான் எழ வேண்டி இருந்தால் சில நாட்கள் அப்படியே செய்யலாம். நாளடைவில் முறையான பயிற்சி வந்து விடும். சிலருக்கோ, கைகளை மேலே காதுகளை ஒட்டினாற் போல் வைத்துக் கொண்டு எழுந்திருக்க முடியாது. கைகளை முன்னுக்கு வீசி பேலன்ஸ் செய்து எழுந்திருந்தால் தான் எழுந்திருக்க முடியும். இதுவும் நாளடைவில் சரியாகி விடும்.

சிலருக்கு கால் விரல்களை கைகளால் தொட முடியாது. பொதுவாகவே முதுகெழும்பு கட்டை பாய்ந்து விட்டிருப்பதால் தான் இப்படி முன்னோக்கி குனிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் பழக பழக கால் விரல்களை கைகளால் பிடித்து விடலாம். சிலருக்கு கால் விரல்களை பிடிக்க முயலும் போது  முழங்கால் தூக்கிக் கொள்ளும். ஆனால் முழங்கால் மடிக்காமலேயே கூடுமான வரை குனிந்து தொட முயற்சிக்க வேண்டும். இப்படி பழகி வரும் போது தொடையில் உள்ள தசைகளும், நரம்புகளிலும் வலி ஏற்படுவதுண்டு. ஆனால் சில நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு முழங்காலில் முகத்தை கொண்டு வைக்க முடியாது. இதுவும் விடா முயற்சியுடன் பழகும் போது சரியாகி விடும். முடியாது என்பது எதுவுமே இல்லை.

ஆசனத்தின் பலன்கள்

பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத் தனம் நீங்குகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும். இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும்.

எச்சரிக்கை

இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால் சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று ஆசனத்தை செய்யலாம். வழக்கமாக ஆசனத்தை செய்து வரும்ட கர்ப்பிணிகள் ஆசனத்தை முழுமையாக செய்யாமல் உட்கார்ந்த நிலையில் காதுகளை ஒட்டி கைகளை நிமிர்த்திய நிலையில் ஆசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன்பக்கம் குனிந்து முழங்காலை தொடும் நிலைக்கு போகக் கூடாது.

ஆசனங்களை பழக்கமில்லாத புதிய கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது.

மனதை ஒருமுகப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

4தமிழ்மீடியாவிற்காக ஆனந்த மயன்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction