முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் தெரிவித்தார். சுதந்திர நாளையொட்டி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் சனிக்கிழமை (ஆக.15) காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இதையடுத்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்த முதல்வர் விஜய், உரையாற்றியதாவது:
தங்களுடைய உயிரை, வாழ்க்கையை, உடமையை இழந்து நமக்காக சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த நம்முடைய சுதந்திர போராட்ட தியாகிகள் அனைவருக்கும் எனது வீர வணக்கங்கள். நம்மை அடிமை போன்று வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே மக்கள் மத்தியில் ஒற்றுமை வரத் தொடங்கும். அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்து ஒன்றுசேர தொடங்குவார்கள். அப்படி ஒன்றுசேரும் இடத்தில் சாதி, மதம், மொழி அனைத்தும் உடையும் இடத்தில் கிடைப்பதுதான் உண்மையான சுதந்திரம்.
386 ஆண்டு பழமையான இந்தக் கோட்டையில், 80 ஆவது சுதந்திர தின நாளில் நமது நாட்டின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, இந்த விழாவில் என்னை பேசவும் வைத்து இருக்கிறீர்கள். உலகம் முழுவதும் இருக்கும் என்னுடைய தமிழ் சொந்தங்களுக்கும், தமிழக மக்களுக்கும், ஜென் ஸி இளம்படை தோழர்களுக்கும் என்னுடைய நன்றி.
பொது வாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது. மக்கள் நலன் தான் மிக முக்கியமான விஷயம். அதன் டிப்படையில்தான் தவெக அரசு செயல்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலும் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்புடன் இருக்கிறோம். அதேநேரத்தில் தமிழக கொள்கைகள் என்று வந்துவிட்டால், மாநில உரிமைகளுக்கு எதிரான முடிவுகளிலும் சரி, தமிழகத்துக்கு எதிரான கொள்கை முடிவிலும் சரி தவெக அரசு எப்பொழுதும் எதிர்க்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
முந்தைய கால ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில், மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தொடருவோம். ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகத் திட்டத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். காலை உணவுத் திட்டத்தையும் விரிவுபடுத்தி செயல்படுத்த இருக்கிறோம் எம்று முதல்வர் விகய் தெரிவித்தார்.
இதையடுத்து, சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் தியாகிக்ளுக்கும் அறிமுகப்படுத்தவுள்ள சிலத் திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்தார்.
முதல்வர் விஜய் அறிவித்த திட்டங்கள்:
நாட்டின் பாதுகாப்புக்காக அரும்பாடுபட்ட முன்னாள் படை வீரர்களின் நலன்கருதி, இரண்டு மகள்களுக்கு திருமண நிதியுதவி ரூ. 25,000 லிருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதியுதவி ரூ. 5,000 லிருந்து ரூ. 7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 23000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 12500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வீர பாண்டிய கட்டபொம்மமன், முத்துராமலிங்க வீஜய ரகுநாத சேதுபதி, மருது சகோதரர்கள் மற்றும் வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
