free website hit counter

மூலிகை அறிவோம் - காரக்கடுகும் விலகும் கோரநோய்களும்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது" என்ற வழக்கு மொழியை எல்லோரும் எம் வாழ்வில் கேட்டிருப்போம்.

கடுகிற்குள் காரம் வந்ததையும் அக் காரத்திற்குள் மருத்துவம் வந்ததையும் பற்றி இம் மருத்துவ உரையில் பார்க்கலாம்.

கடுகில் இரு வகை உண்டு.
1. கருங்கடுகு/செங்கடுகு
2. வெண்கடுகு

தாவரவியல் பெயர் - Brassica nigra கருங்கடுகு
Brassica alba வெண்கடுகு
குடும்பப் பெயர் - Cruciferae/ Brassicaceae
ஆங்கிலப் பெயர் - Mustard seed
சிங்களப் பெயர் - அ(b)பா
சமஸ்கிருதப் பெயர் - ராஜிகா, சர்ஸபா
வேறு பெயர் - ஐயவி

பயன்படும் பகுதிகள்
விதைகள்

சுவை -காரம்
வீரியம் - வெப்பம்
விபாகம் - கார்ப்பு

வேதியியற் சத்துகள் Glucosinolate sinigrin
Fixed oil
Myrosin
Sinalbin
Albumins
Volatile oil
Inosite

மருத்துவச் செய்கைகள்
Anthelmintic- புழுக்கொல்லி
Antidysenteric- கழிச்சலடக்கி
Diaphoretic- வியர்வை பெருக்கி
Digestive- செரிப்புண்டாக்கி
Diuretic- சிறுநீர் பெருக்கி
Emetic- வாந்தியுண்டாக்கி
Rubefacient- தடிப்புண்டாக்கி
Stimulant- வெப்பமுண்டாக்கி
Stomachic- பசித்தீ தூண்டி
Vesicant- கொப்புளமெழுப்பி

தீரும் நோய்கள்
கருங்கடுகு
தலையிடியை தரக்கூடிய இருமல், மூக்குநீர் வடிதல், கோழை, வெறி,
காணாக்கடி விஷம்,
குடைச்சல், கழிச்சல்,
மந்தம், வயிற்றுவலி,
சீதக்கடுப்பு, கீல் வாயு,
செரியாமை, தலை சுற்றல், விக்கல் இவற்றை குணமாக்கும்.

வெண்கடுகு
குழந்தைகளுக்குண்டாகும் தோஷங்கள், கடி விஷம், முடக்குவாயு என்பன நீங்கும்.

பயன்படுத்தும் முறைகள்
2 g பச்சைக் கடுகை அரைத்து நீரில் கலக்கிக் கொடுக்க வாந்தி உண்டாகும். நஞ்சுண்டவர்களுக்கு கொடுக்க, உண்ட நஞ்சு வெளியாகும்.

கடுகை அரைத்து கெண்டைச் சதைகளில் துணியில் தடவிப் போட, சுரவேகத்தினால் உண்டான மயக்க தோஷங்கள் நீங்கும். கை,கால்களில் தடவி சீலையில் சுற்றி வைக்க அவைகளில் தங்கிய சீதகுணம் நீங்கி வெப்பமுண்டாகும்.

தொண்டை, மார்பு முதலிய இடங்களில் தடவ அவ் இடங்களில் உண்டாகும் நோய்களைத் தணிக்கும்.

மார்புக்குழியில் சீலையில் தடவிப் போட விக்கல் தணியும்.

கீல்வாயு, குருதி கட்டிக் கொண்ட இடம் இவைகளுக்கு மேலுக்கு பற்றிடலாம்.

தேனில் அரைத்து கொடுத்தால் இரைப்பு, இருமல் இவை தீரும்.

அடுத்தடுத்துக் கொடுத்தால் சிறுநீரைப் பெருக்கும்.

கடுகுத்தூள், அரிசிமா இவைகளை ஒரேயளவு எடுத்து போதுமானளவு நீரிலிட்டு களி போல் கிளறி துணியில் தடவி வயிற்றுவலி, குடைச்சல் இவைகளுக்கு அந்தந்த இடங்களிலும் இருமல், இரைப்பு இவைகளுக்கு மார்பின் மீதும் தலைவலி, வெறி இவைகளுக்கு பிடரியின் மேலும் வாந்திபேதியிற் காணும் கெண்டைச் சதைப்புறழ்ச்சிக்கு கால் கெண்டைச்சதையின் மேலும் போட குணமுண்டாகும்.

கடுகுத்தூள் 8 g வெந்நீர் 130 ml எடுத்து அதில் கடுகை ஊறவைத்து வடித்துக் கொடுக்க விக்கல் நீங்கும்.

கடுகை இடித்து சிறிது கற்கண்டு சேர்த்து வெந்நீர் கூட்டி நீரில் காய்ச்சி எடுக்கும் போது நீரின் மீது எண்ணெய் படிந்து வரும். இவ் எண்ணெயை கழலைகள், வீக்கங்களுக்கு மேல் தடவலாம்.

கடுகு காரமானாலும் அதனாலுண்டாகும் குணம் பெரிது. எனவே அன்றாடம் உபயோகித்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோமாக!

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction