நாடாளுமன்றத்திற்கு அருகில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் குழுவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று உரையாடினார்.
அரசாங்கத்திடம் வேலை கோரி பத்தரமுல்லையில் உள்ள பொல்துவ சந்திப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசிய வேலையற்ற பட்டதாரிகள், கடந்த தேர்தலின் போது, அரசாங்கம் வேலை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்று கூறினர்.
தாங்கள் உட்பட சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் சிக்கித் தவிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த விவகாரம் குறித்து முன்னர் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திற்கு அறிவித்திருந்தாலும், அரசாங்கத்திடமிருந்தோ அல்லது பொறுப்பான தரப்பினரிடமிருந்தோ எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான பிரச்சினைக்கு இன்று நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். (நியூஸ்வயர்)