திருச்சி மாநகரில் வசித்துவரும் சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் நடுத்தர வயதுகொண்ட ஆத்ம நண்பர்கள்.
இவர்கள் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், “நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், வாய் தகராறு ஏற்படவே, பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே ,இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மனுதாரர்கள் இருவரும் இனிமேல், குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்கப்படும்” என அதிரடியாக கூறி வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார். நீதிபதிகள் இந்த நிபந்தனையைத் தெரிவித்தபோது நீதிமன்றத்தில் அனைவரும் வாய்விட்டுச் சிரித்ததால் கலகலப்பானது!
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    