சுவிற்சர்லாந்தின் ஃப்ரிபோர்க் கெர்சர்ஸில் செவ்வாய் கிழமை இரவு, பேருந்தில் ஏற்பட்ட துயர தீ விபத்திற்குக் காரணமானவர் அடையாளங் காணப்பட்டார்.
இந்த விபத்தில் இறந்த ஆறு பேர் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்துக் காரணமானவரும், இறந்த ஆறுபேர்களில் ஒருவர் என ஃப்ரிபோர்க் மாநில காவல்துறை அறிவித்ததுள்ளது.
தீ விபத்துக்குக் காரணமானவர் இறந்தவர்களில் ஒருவரான பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் 65 வயது சுவிஸ் குடிமகன். இவர் மனநலக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர் எனவும், போதைப்பொருள் பாவனைக்காக பெர்ன் மாநில காவல்துறைக்கு அறியப்பட்டவர் எனவும் தெரிய வருகிறது. சட்ட அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, அவர் பெர்ன் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், செவ்வாய்க்கிழமை மதியம் 1:00 மணிக்குப் பிறகு அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த 63 வயது பஸ் ஓட்டுநரும் தீ விபத்தில் இறந்தார். இவர்களுடன், மேலும் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு பெண்கள், 16 மற்றும் 29 வயதுடைய இரண்டு ஆண்கள், என இப்பகுதியில் வசிக்கும் சுவிஸ் குடிமக்களும் பலியாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் 34 மற்றும் 61 வயதுடைய இரண்டு ஆண்கள், 27 மற்றும் 56 வயதுடைய இரண்டு பெண்கள், சுவிஸ் குடிமக்கள் எனவும், அதே போல் 32 வயதுடைய ஒரு ஆண் கொசோவோ குடிமகன் எனவும் தெரிய வருகிறது. 56 வயது பெண் மற்றும் 34 வயது ஆண் ஆகிய இருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களில் இனுவிலைப் பூர்விகமாகக் கொண்ட ஒரு தமிழ் இளைஞனும், ாாயமடைந்தவர்களில் ஒரு தமிழ் பெண்மணியும் உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த துயரச் சம்பவத்தின் துல்லியமான சூழ்நிலைகளை கண்டறியும் பணியில் காவல்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.
