கொரோனா வைரஸ்கள் என்றால் என்ன?
மனிதர்களிலும், விலங்குகளிலும் உடல் நலக் குறைவை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்களின் மிகப்பெரிய குடும்பமே கொரோனா வைரஸ்கள். மனித உடலில் சுவாசத் தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடிய பல கொரோனா வைரஸ்கள் உள்ளன. இவற்றில் MERS மற்றும் SARS ஆகிய நோய்கள் முக்கியமானவை. மிக மிக சமீபத்தில் டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப் பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர் தான் COVID-19 ஆகும்.
கோவிட்-19 ஏற்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன?
பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், களைப்பு, வறட்டு இருமல் போன்றவை. சில நோயாளிகளுக்கு தலையிடி, நோவு, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தொண்டை வலி மற்றும் வயிற்றுப் போக்கும் இருக்கும். இந்த அறிகுறிகள் பொதுவாக லேசானவை மற்றும் படிப்படியாக தொடங்கும். சிலருக்கு நோய்த் தொற்று இருந்தாலும் இது போன்ற எந்த அறிகுறியையும் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் தமக்கு உடல் நலம் குன்றியதாக உணர்வார்கள். இந்த கோவிட்-19 தொற்று ஏற்பட்ட 80% வீதமான மக்கள் எந்தவொரு விசேட சிகிச்சையும் இன்றி குணமடைந்து விடுவர். இத்தொற்று பாதிக்கப் பட்டவர்களில் 1/6 பேர்தான் மிகவும் சுகயீனம் அடைந்து சுவாசிக்கக் கஷ்டப் படும் நிலை ஏற்படக் கூடும்.
வயதானவர்கள், மற்றும் உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் அல்லது நீரிழிவு போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
கோவிட் 19 எவ்வாறு பரவுகின்றது?
நோய்த் தொற்று உள்ளவர்கள் சுவாசிக்கும் போதோ, இருமும் போதோ அல்லது தும்மும் போதோ மூக்கு அல்லது வாயில் இருந்து ஒழுகும் திரவத் துளிகள், இந்தத் திரவத் துளிகள் தேங்கியுள்ள பகுதிகளைத் தொட நேரிட்டாலும், பின் அதே கையால் முகம், மூக்கு வாய், கண் போன்ற பகுதிகளைத் தொட நேரிட்டாலும் கோவிட்-19 இனை ஏற்படுத்தும் வைரஸ்கள் இலகுவில் தொற்றிக் கொள்ளும்.
இதனால் தான் குறைந்தது 1 மீட்டருக்கும் (3 அடி) அதிகமான தூரத்தை நோய் அறிகுறி தென்படுபவரிடம் இருந்து பேணுவது அவசியம் எனப்படுகின்றது. கோவிட்-19 நோய்த் தொற்றை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்கள் தொடுகை மற்றும் நோயாளிகளின் திரவத்தில் இருந்து தான் அதிகம் பரவுகின்றது. இது காற்றின் ஊடாக 1 மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ள ஒருவருக்குப் பரவும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். இது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சி இன்னமும் நடத்தப் பட்டு வருகின்றது.
மேலும் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்படுத்தும் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டாத ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது பரவும் வீதமும் மிகக் குறைவாகும். ஆனாலும் எவரையும் தொடுவது குறிப்பாக கை குலுக்குவது, கட்டிப் பிடிப்பது மற்றும் முத்தமிடுவது போன்ற செய்கைகளைத் தவிர்ப்பது நலம் என மருத்துவ உலகம் பரிந்துரைப்பது உங்களது நண்மைக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் நண்மைக்கும் ஆகும்.
தொடுகை மூலம் கோவிட்-19 நோய் பரவுவது தொடர்பான WHO இன் ஆராய்வுகளும் தற்போது நடைபெற்று வருகின்றது.
மேலும் கோவிட்-19 தொற்றுக்கு ஆளான நபர் ஒருவரின் சிறுநீர் மற்றும் மலத்தில் இருந்து இது காற்று மூலமாகப் பரவித் தொற்றும் வாய்ப்பும் மிகக் குறைவாகும். ஆனாலும் யாராக இருந்தாலும் முக்கியமாக நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் தமது மலசலகூடத்தை அடிக்கடி கிருமி நாசினி திரவங்கள் மூலம் துப்பரவாக்கி வைத்திருப்பதும், மலசல கூடம் பாவித்த பின்பு எப்போதும் கைகளை சேனிடைசர் அல்லது கிருமி நாசினி அல்லது சோப் கொண்டு நன்கு கழுவுவது அவசியம் ஆகும்,
உணவு உட்கொள்ள முன்பும் கைகளை நன்கு சோப் போட்டு அலசிக் கழுவிக் கொள்வது அவசியம் ஆகும்.
கோவிட்-19 தொற்றினை ஏற்படுத்தும் வைரஸ்கள் வீரியமாகப் பரவக் கூடிய வெவ்வேறு வழிகள் குறித்து உலக சுகாதாரத் தாபனம் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
தொடரும்...
4தமிழ்மீடியாவுக்காக நவன்
உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 1)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode
 
																						 
														
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    