தத்துவஞானியும் ஆன்மீக எழுத்தாளருமான எகார்ட் டோல் “இப்போதைய தருணமே வாழ்க்கை” எனும் கூற்றை வலியுறுத்துகிறார்.
மனித வாழ்க்கையின் பெரும்பாலான துன்பங்களும் கவலைகளும் கடந்த காலத்தை நினைத்து வருந்துவதிலோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுவதிலோ இருந்து தோன்றுகின்றன. ஆனால் உண்மையில் மனிதன் வாழ முடியும் ஒரே நேரம் “இப்போது” என்ற தருணமே.
மனிதனால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. அது நினைவாக மட்டுமே உள்ளது. அதைப் பற்றிய வருத்தமும் குற்ற உணர்வும் நம் மனதை சோர்வடையச் செய்கின்றன. அதேபோல் எதிர்காலமும் இன்னும் உருவாகாத ஒன்று. அதை பற்றி அளவுக்கு மீறி சிந்திப்பது பயம் மற்றும் பதட்டத்தை உருவாக்குகிறது. ஆகையால் கடந்த காலமும் எதிர்காலமும் நம் சிந்தனையில் இருக்கலாம்; ஆனால் நம் வாழ்வை உண்மையில் வடிவமைப்பது நிகழ்காலமே.
இப்போதைய தருணத்தில் வாழ்வது என்பது மனதின் முழு கவனத்தையும் நடக்கும் செயலில் செலுத்துவதாகும். நாம் உணவு உண்ணும்போது அதன் சுவையை உணர்ந்து உண்ணுதல், நண்பர்களுடன் பேசும்போது முழு கவனத்துடன் கேட்பது, இயற்கையை ரசிக்கும் போது அதில் முழுமையாக மூழ்குவது போன்றவை நிகழ்காலத்தில் வாழ்வதற்கான எளிய உதாரணங்கள். இவ்வாறு வாழும்போது மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும்.
இப்போது பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களில், கடந்த கால அனுபவங்களின் ஏக்கங்களும், எதிர்கால வாழ்வின் எதிர்பார்ப்புக்களுமே முக்கியமாகின்றன. நிகழ்காலத்தில் வாழ்வது மனிதனை மனஅழுத்தத்திலிருந்து விடுவிக்கிறது. ஏனெனில் இப்போதைய தருணத்தில் நாம் செய்ய வேண்டியதை மட்டுமே கவனிக்கிறோம். இதனால் சிந்தனை சீராகி வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளையும் நாம் உணர முடிகிறது. ஒரு மலரின் மணம், ஒரு புன்னகை, ஒரு நல்ல வார்த்தை போன்ற சிறிய விஷயங்களும் பெரும் மகிழ்ச்சியை தரும்.
மேலும் நிகழ்காலத்தில் வாழ்வது மனிதனை விழிப்புணர்வுடன் செயல்பட வைக்கிறது. நாம் செய்யும் செயல்களில் பொறுப்பு உணர்வு அதிகரிக்கிறது. இதனால் வாழ்க்கையின் தரமும் உயர்கிறது. ஒரு மாணவன் படிப்பில் கவனம் செலுத்தும் போது, ஒரு தொழிலாளர் தனது பணியை முழுமனதுடன் செய்வது போன்றவை எல்லாம் நிகழ்காலத்தில் வாழ்வதன் விளைவுகளே.
எனவே மனிதன் உண்மையாக வாழ வேண்டுமெனில் “இப்போது” என்ற தருணத்தை மதிக்க வேண்டும். கடந்த காலத்தை அனுபவமாக ஏற்றுக் கொண்டு, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கி, இப்போதைய தருணத்தில் முழுமையாக வாழும் போது தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது.
முடிவாகச் சொல்லப் போனால், வாழ்க்கை என்பது நாளை ஆரம்பிக்கப் போகும் ஒன்றல்ல; அது இப்போதுதான் நடக்கிறது. அதனால் ஒவ்வொரு தருணத்தையும் விழிப்புணர்வுடன் அனுபவிப்பதே உண்மையான வாழ்வு. இதுவே “இப்போதைய தருணமே வாழ்க்கை” என்ற எகார்ட் டோலின் கருத்தின் ஆழமான அர்த்தமாகும்.
- 4தமிழமீடியாவிற்காக: மலைநாடான்
