free website hit counter

ஆண் சாமியார்களை ஏத்துக்கறீங்க.. அன்னபூரணியை மட்டும் ஏன் கலாய்க்கறீங்க?

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அன்னபூரணி என்ற திடீர் பெண் சாமியார் குறித்த பரபரப்பு தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

தமிழகத்தை அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு வந்து கலக்கி எடுக்கும். ஒரு புதிய பரபரப்பு வந்தால் ஏற்கனவே இருந்த பழைய பரபரப்புகள் அடங்கிப் போய் விடும் அல்லது மக்களால் மறக்கடிக்கப்பட்டு விடும். பல சமயங்களில் மக்களை ஏதாவது பரபரப்பிலிருந்து திசை திருப்பவும் புதிய பரபரப்புகள் பிறப்பெடுக்கும்.. இந்த வரிசையில் தமிழக மக்களை புதிதாக ஒரு பரபரப்பு ஆட்கொண்டுள்ளது. அதுதான் "அன்னபூரணி."

ஆதி பராசக்தியின் அவதாரமாக தன்னை வரித்துக் கொண்டிருக்கும் அன்னபூரணியின் பக்கம் "பக்தர்கள்" பலரும் அலை பாய ஆரம்பித்துள்ளனர். இவரை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும், வீடியோக்களும், வாதங்களும் வரிசை கட்ட ஆரம்பித்துள்ளன.. மறுபக்கம் அன்னபூரணியை வைத்து அவரது "பக்தகோடிகள்" கல்லா கட்ட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் சுந்தரவள்ளி எழுப்பியுள்ள ஒரு கேள்வி சிந்தனையை எழுப்புவதாக உள்ளது. அன்னபூரணி விவகாரம் குறித்து சுந்தரவள்ளி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், "அன்னபூரணி ஆதிபராசக்தி என்றதும் எல்லோருக்கும் கோபமும் கிண்டலும் வருகிறது . பங்காருஅடிகள் ஆதிபராசக்தியின் அவதாரமாக சொல்லிக் கொள்கிறார். நித்யானந்தா சிவன் திருமால் அவதாரமாக சொல்லிக் கொள்கிறார். அப்போது வராத கோபம் கிண்டலும் இப்போது ஏன் வருகிறது. பக்தியில இதெல்லாம் சாதாரணமப்பா" என்று சுந்தரவள்ளி கூறியுள்ளார்.

அவரது கூற்றிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. நித்தியானந்தா மீது இல்லாத புகார்கள் இல்லை. அவர் இப்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பது கூடத் தெரியவில்லை. கைலாசா என்ற புதிய நாட்டை ஸ்தாபித்துக் கொண்டதாகவும் அவர் கூறி வருகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் பாய முடியவில்லை. அவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

ஆண் சாமியார்கள் என்ன செய்தாலும் அதுகுறித்து பெரிதாக சர்ச்சை வராத நிலையில் பெண் சாமியார் என்றால் மட்டுமே ஏன் இப்படி கேள்விகள் புறப்படுகின்றன என்பதே சுந்தரவள்ளியின் கேள்வி. சாமியார்கள் என்றாலே ஒரு காலத்தில் மக்கள் பயபக்தியுடன் வணங்கிய காலம் இருந்தது. ஆனால் இன்று சாமியார்கள் என்றாலே பத்து அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும் என்ற நிலைக்கு போய் விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் புதிது புதிதாக புறப்பட்டு வரும் சாமியார்களின் " வெற்றி" என்பது அவர்களை நாடி வரும் பக்தர்களின் "நம்பிக்கை" நீடிக்கும் வரை மட்டும்தான் என்பதும் எதார்த்தம்.

இந்த அன்னபூரணி எந்த அளவுக்கு பிரபலபமாகப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை.
மக்களுக்கு ஓமைக்ரான் பதட்டத்திலிருந்து கொஞ்ச காலத்திற்கு இந்த அன்னபூரணி அம்மன் "ரிலாக்ஸ்" கொடுப்பார் என்று மட்டும் தாராளமாக நம்பலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction