ஈரான் முழுவதும், குறிப்பாக தலைநகர் தெஹ்ரானில், பல தளங்கள் மற்றும் இலக்குகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது, இதன் விளைவாக ஏராளமானோர் உயிரிழந்தனர், மற்றும் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த இரவில், ஈரான் இஸ்ரேல் மீது ஏவுணணைத் தாக்குதல்களைத் தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈரானின் வான்வழித் தாக்குதல் நிகழ்ந்துள்ளதை இஸ்ரேலிய இராணுவமும் உறுதி செய்துள்ளது. இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ்வில், சைரன்கள் அலறின. விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்தன். ஆனால் அதையும் தாண்டி, சில ஏவுகணைகள் தரையில் விழுந்து வெடித்துள்ளன.மேலும் மக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அழைக்கப்பட்டனர். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சிறப்பு அவசரகால நிலையை அறிவித்தார்
வெள்ளிக்கிழமை,ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய தளங்கள் உள்ளிட்ட மூலோபாய இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது. இந்தத் தாக்குதலை அச்சுறுத்தலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை என்று இஸ்ரேல் குறிப்பிட்டது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில், ஈரான் தலைநகரில் மட்டும் 78 பேர் இறந்ததாகவும், 329 பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் கூறுகின்றன. மேலும் ஈரானின் இரண்டாவது பெரிய மற்றும் மிகவும் வலுவூட்டப்பட்ட அணுசக்தி வளாகமான ஃபோர்டோவை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியுள்ளது என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் புனித நகரமான கோமுக்கு வடக்கே அமைந்துள்ள ஃபோர்டோ தளம், ஆழமான நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளது, அங்குதான் தெஹ்ரான் ஆயுத தர யுரேனியத்தை சேமித்து வைத்துள்ளது. இத்தளத்திலிருந்து தாக்குதலுக்கு வேண்டிய ஒரு மிகவேகமா குண்டை உற்பத்தி செய்ய முடியும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இத்தாக்குதல் நோக்கம் குறித்து பேசுகையில், "ஃபோர்டோவை அகற்றுவதன் மூலம் முழு நடவடிக்கையும் உண்மையில் முடிக்கப்பட வேண்டும்," என்று அமெரிக்காவிற்கான இஸ்ரேலின் தூதர் மைக்கேல் லீட்டர் வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார். இதேவேளை கொலம்பியா பல்கலைக்கழக உலகளாவிய எரிசக்தி கொள்கை மையத்தின் ஈரான் நிபுணர் ரிச்சர்ட் நெஃப்யூ, ஃபோர்டோவிடம் "அணு ஆயுதத்தை மிக விரைவாக தயாரிக்க போதுமான மையவிலக்குகள் உள்ளன" என்று டைம்ஸிடம் கூறினார்.
இது இவ்வாறிருக்க, இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்களை வீழ்த்தியதாகவும், ஒரு விமானியைக் கைப்பற்றியதாகவும் ஈரானிய விமானப் பாதுகாப்பு பிரிவு வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தது. இரண்டு விமானிகளில் ஒருவரான ஒரு பெண்ணை, அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, அவர்கள் கைது செய்ததாக விமானப் பாதுகாப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன்களில் இந்த நடவடிக்கை "வெற்றி" என்றும் "நாட்டின் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ஆயுதப்படைகளின் தயார்நிலையை உறுதிப்படுத்துவதாகவும்" ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக, இதுவரை இஸ்ரேலில் குறைந்தது 41 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் நான்கு பேர் மிதமான நிலையில் உள்ளனர், 33 பேர் லேசான காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பெய்லின்சன், இச்சிலோவ் மற்றும் ஷெபா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.