'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில், தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் என, ஈரான் மீது இஸ்ரேல் தொடங்கிய இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, இரு தரப்பும் பரஸ்பரம் தொடர்ந்து வான் வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
நான்காவது நாளாக நடைபெறும் போரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்த வண்ணம் இருந்தன. டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகேயும் ஒரு ஏவுகணை விழுந்து வெடித்தது. இத் தாக்குதலால் சிறிய சேதம் ஏற்பட்டது என அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி X இல் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் குறைந்தது 224 பேர் கொல்லப்பட்டும், ஈரானிய இராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்பு மீதான இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுப்பதாக ஈரான்சபதம் செய்துள்ளது. இன்று காலை ஈரானின் இராணுவ மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதன் புரட்சிகர காவல்படை ஒரு புதிய முறையைப் பயன்படுத்தி, மேற் கொண்ட தாக்குதலில், குறைந்தது ஐந்து பேர் இறந்ததுடன், சுமார் 90 பேர் வரை காயமடைந்ததாகத் தெரிய வருகிறது.
ஈரானின் புரட்சிகர காவல்படையின் கூற்றுப்படி, இஸ்ரேலுக்கு எதிரான இரவுத் தாக்குதலில் ஒரு புதிய முறை பயன்படுத்தப்பட்டதன் மூலம், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை பயனற்றதாக மாற்றியது என ராய்ட்டர்ஸ் நிறுவனத்தை மேற்கோள் காட்டி தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. "அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சக்திகளின் முழு ஆதரவு மற்றும் மிகவும் நவீன மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வைத்திருந்த போதிலும், இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் திறன்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள இலக்குகளில் ஏவுகணைகளின் அதிகபட்ச வெற்றிக்கு வழிவகுத்தன," என்று ஈரானிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் தொடர்பாக ஐரோப்பிய தலைவர்கள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வந்தாலும், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஒரு பொது ஆதரவை வெளியிட்டுள்ளன.பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் - ஆகிய மூன்று நாடுகளும் இஸ்ரேலின் சுய பாதுகாப்பு உரிமையை வலியுறுத்துகின்றன மற்றும் ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை மிகுந்த கவலையுடன் பார்க்கின்ற வகையில் ஒன்றுபடுகின்றன.