நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு சமகி ஜன பலவேகய (SJB) நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கும் என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அத்தகைய திருத்தத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் ஆனால் தேர்தலை நடத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“நாங்கள் ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நம்பினோம். எவ்வாறாயினும், சட்டத்தின் ஆட்சிக்கு அது ஏற்படுத்தக்கூடிய சேதத்தை நாங்கள் இப்போது புரிந்துகொண்டோம். எனவே, தற்போது அது குறித்த எமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளோம்” என SJB சட்டத்தரணிகள் சங்க மாநாட்டில் பிரேமதாச தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது எந்தவொரு தேர்தலையோ நடத்தாமல் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு நாங்கள் சாதகமாக இல்லை. மக்களின் வாக்குரிமையை மீறக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று அவர் கூறினார்.
“நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் பணி ஜனாதிபதியின் கையாட்கள் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சிவில் சமூகத்தைச் சேர்ந்த சிலருடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளார். இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான நேரம் கனிந்துவிட்டதாகக் கூறி, தற்போது ஜனாதிபதி பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் முன்னர் தேர்தலை நடத்துவதற்கு தமது கட்சி பாடுபடும் என்று பிரேமதாச கூறினார்.
மேலும், தான் அங்கம் வகிக்கும் அரசியலமைப்பு சபை ஒருபோதும் ஜனாதிபதியின் அடிமையாக மாறாது எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.