தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வுக்கு எதிராக இன்றைய சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, சர்க்கரை என எந்தப் பொருளை எடுத்தாலும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏழை, எளிய மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
தவெக அரசில் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த விலையேற்றத்தால் மக்கள் பாதிப்படைந்திருப்பதாகவும், மளிகைக் கடைகளுக்கே மக்கள் செல்வது குறைந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசி, பருப்பு, சர்க்கரையின் அளவை இன்னும் கூடுதலாக வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும்.
மேலும், முதல்வரின் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு ஆகிய துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, விலைவாசி உயர்வுக்கு இந்த அரசு தீர்வுகாண வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "அரிசி விலை கிலோவுக்கு ரூ. 20, சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ. 24 உயர்ந்துள்ளது. இதுதவிர பல்வேறு பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் வறட்சி நிலவி வருகிறது. ஆந்திரத்திலும் வறட்சி நிலவுவதால், அங்கிருந்து கிடைக்கும் அரிசியின் வரவும் குறைந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைப்போல, இந்த தவெக அரசும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் முயற்சி செய்கிறதா என அறிய விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
