கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது.
கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் அரசுத் தரப்பிலும், தவெக தரப்பிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தவெக அரசுப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த ஜூலை 10 ஆம் தேதி, கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களில் 31 பேரின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்.
கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பலியானவர்களுக்கு அரசுப் பணி வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது, காவல்துறையின் தவறால்தான் அவர்கள் உயிரிழந்ததாகவும், சாதாரண அரசுப் பணியே வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “திறன் வளர் பயிற்சி வழங்கி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு உதவலாமே? அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாகக் கூறுவதை ஏற்க இயலாது. எந்த பணியும் சாதாரண பணி அல்ல. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே” எனத் தெரிவித்தனர்.
மேலும், அரசுப் பேருந்து விபத்து விபத்தில், பட்டாசு ஆலை விபத்தில் நாள்தோறும் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க முடியுமா என்றும் அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வியை முன்வைத்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வரால் வழங்கப்பட்ட அரசுப் பணிக்கான இடைக்கால ஆணைகளை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, பணி நியமன ஆணை வழங்கும் நாளன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய உத்தரவில், அரசுப் பணி நியமனத்துக்கான இடைக்கால ஆணைகளை மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
