ஒருவரின் அழுகையை ஏன் வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்; மரணத்தை காசாக்க வேண்டாம் என்று, ஊடகங்களுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில், தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வருவதை, தமிழ்நாட்டு தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின. இறுதிச்சடங்கு ஊர்வலமும் நேரலையாக ஒளிபரப்பாகின.
தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரபலங்களை, துக்கவீட்டில் பேட்டி எடுத்து ஒளிபரப்பின. துயரமான தருணத்தில் ஊடகங்கள் இவ்வாறு செயல்படலாமா என்ற கேள்விகளை சிலர் எழுப்பினர்.
இந்த நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி.ஜி. தியாகராஜன் ஊடகங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும். ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன்.
மரண வீடுகள் மௌனிக்கப்படவும். துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும், துயர் கொள்ளவும் வேண்டியவை. ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?! நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலுக்கிறது.
ஊடகங்கள் கார்களின் உள்ளேயும்.. நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்?! அதுவும் முண்டியடித்துக்கொண்டு துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது?!
இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும். அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும். கையில் கேமரா இல்லாமல். இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு முன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.