எம்புரான் படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றதாக புகார்கள் எழுந்த நிலைய்ல், நடிகர் மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர்கள், தாங்களாகவே சில காட்சிகளை நீக்கி உள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்து மார்ச் 27ஆம் தேதி வெளியாகி இருக்கிறது ‘எல்2: எம்புரான்' என்ற திரைப்படம். இதில், இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதுபோல் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக, வலதுசாரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆர்கனைசர் இணையதளத்தில், "பிளவுபடுத்தும் மற்றும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் நடிக்க நடிகர் மோகன்லால் முடிவு செய்தது அவரது விசுவாசமான ரசிகர் பட்டாளத்திற்கு செய்யும் துரோகம்" என்று ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கேரள பாரதிய ஜனதா கட்சியினர் இதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம், வசூலை ஈட்டி வருகிறது. எனினும், இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பை அடுத்து, எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்றா 17 காட்சிகளை நீக்குவதாக, தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக, அதில் கதாநாயகனாக நடித்த மோகன்லால், தனது சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தேன்.
ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை. எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும் எம்புரான் குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம். இப்படத்திலிருந்து இதுபோன்ற காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம்” என்று தெரிவித்துள்ளார்.