free website hit counter

சிவகார்த்திகேயன் - பொன் ராம் மோதல்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணி இணைந்து அடுத்து உருவாக்கிய, ‘ரஜினி முருகன்’,  ‘சீமராஜா’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.இதனால் இந்தக் கூட்டணி பிரிந்தது. இந்தக் கூட்டணியில் நகைச்சுவைக்கு நடிகர் சூரியும் இணைந்து வந்தார். ஆனால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தற்போது பல்வேறு ஊகங்கள் கிளம்பிய நிலையில், ‘டாக்டர்’ படத்தின் பரப்புரையின்போது பேட்டியளித்த நடிகர் சிவகார்த்திகேயன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பே இல்லை. அதுவொரு எபிக். அதைக் கெடுக்க விரும்பவில்லை என்று  பேட்டியளித்தார். மேலும் அந்தப் பேட்டியின்போது “வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சும்மா பேசினோம். ஆனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதைத் திரும்ப எடுக்கவே முடியாது…” என்று தெரிவித்திருந்தார்.  

 இந்த நிலையில் படத்தின் இயக்குநரான பொன்ராம், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அதில் “ ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் பக்குவப்பட்ட நடிகர் ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2 எடுப்போம். போட்றா வெடிய..” என்று தெரிவித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு 3 கோடி ரூபாய் ஊதியமாகப் பெற்ற சிவகார்த்திகேயன் அதிலிருந்து 50 லட்சம் ரூபாயை இயக்குநர் பொன் ராமுக்கு கொடுத்தது அப்போதே பேசுபொருளானது. இந்த விவகாரம் தொடரும் என்றே தெரிகிறது.

இதற்கிடையில் ‘டாக்டர்’ படத்தின் தெலுங்கு மொழிமாற்றுப் பதிப்பான ‘வருண் டாக்டர்’ பரப்புரைக்காக ஹைதராபாத் சென்றிருந்த சிவகார்த்திகேயன் அங்கே தான் நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்க இருப்பதையும் அதற்காக தெலுங்கு கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  “அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.  தனுஷ் நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் தகவலையும் தெரிவித்தார். இதே நிறுவனம்தான் தனுஷை வைத்தும் ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளது.  சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு படத்தை, தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஜாதி ரத்னாலு’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் இயக்க இருப்பதை தெரிவித்துள்ளார்.

 
4தமிழ் மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction