free website hit counter

ஐ.பி.எல் - 1வது தகுதி சுற்று போட்டியில் குஜராத்தை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது சென்னை அணி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரர்களான கான்வேயும் கெய்க்வாட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கெய்க்வாட் 60 ரன்களில் மோகித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே, ரகானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஓரளவு சிறப்பாக விளையாடிய கன்வேயும் 40 ரன்களில் வெளியேறினர். இதனால், சென்னை அணியின் ரன் வேகம் சற்று தணிந்தது. அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட டோனியும் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஜடேஜா ஓரளவு ஆறுதல் அளித்தார். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷமி மற்றும் மொகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நலகண்டே, ரஷித் கான் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சஹா 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்டியா 8 ரன்களும், தசுன் ஷனகா 17 ரன்களும், டேவிட் மில்லர் 4 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் 42 (38) ரன்களில் தீபக் சாஹர் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ராகுல் திவாட்டியா 3 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து விஜய் சங்கரும் 14 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய நல்கண்டே (0) ரன் அவுட் ஆகி வந்த வேகத்திலே வெளியேறினார்.

மறுமுனையில் தனி நபராக போராடிக்கொண்டிருந்த ரஷித் கான் 30 (16) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் சமி 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீக்சனா, தீபக் சாஹர் மற்றும் ஜடேஜா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தேஷ்பாண்டே 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்படி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம், முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction