இஸ்ரேலின் பலமான வான் பாதுகாப்பினை உடைத்து , ஏமனில் இருந்து ஹவுத்திகள் ஏவிய ஏவுகணை தாக்கியது. ஏவுகணைத் தாக்குதல் காரணமாக, டெல் அவிவ் விமான நிலையப் பகுதிக்குள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இன்று காலை விமான நிலையத்தின் 3வது முனையத்திற்குள் நுழைந்த ஏவுகணை, பீதியைத் தூண்டிய ஒரு பெரிய இடி சத்தத்துடன் வெடித்ததாகவும், பாதுகாப்பான பகுதிகளை மக்கள் அடைய நேரமில்லாமல் போனதாகவும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் செய்திச் சனல்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணை விழுந்ததைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குள் மீண்டும் திறக்கப்பட்ட பென் குரியன் விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், புறப்படுதல் மற்றும் தரையிறக்கங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலைய நிலையத்திலும் ஜெருசலேம் மற்றும் சில பாதைகளிலும் ரயில் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளதாகவும், மக்கள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று போலீசார் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
கத்தார் ஒளிபரப்பாளரான அல் அரபியிடம் பேசிய, மூத்த ஹவுத்தி அதிகாரி முஹம்மது அல்-பஹிதி, "டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தின் மீதான தாக்குதல், இஸ்ரேலுக்குள் உள்ள முக்கியமான இடங்களை குறிவைக்கும் குழுவின் திறனுக்கு சான்றாகும். காசா மீதான முற்றுகை நீக்கப்படாவிடின், எய்லாட் துறைமுகம் மூடப்பட்டது போல், பென் குரியன் விமான நிலையமும் மூடப்படும். ஆதலால் குறிப்பிட்ட விமான நிலையத்தில் பயணிகளையும் விமானங்களையும் ஆபத்தில் ஆழ்த்துவதைத் சர்வதேச விமான நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் " எனவும் எச்சரித்தார் எனமேலும் சில செய்தித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பென் குரியன் விமான நிலையத்தின் மீதான ஹவுத்தி ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்றும், இத்தாக்குதலுக்கு ஈரானே நேரடியாகப் பொறுப்பேற்கும் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்