18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது.
இதில் உலகின் அதிவேக வீராங்கனை யார்? என்பதை நிர்ணயிக்கும் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதி சுற்று இந்திய நேரப்படி நேற்று காலை அங்கு நடந்தது. இலக்கை நோக்கி 8 வீராங்கனைகள் ராக்கெட் வேகத்தில் பாய்ந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்து ரசிகர்களை சிலிர்க்க வைத்த இந்த ஓட்டத்தில் எதிர்பார்த்தபடியே டாப்-3 இடங்களை ஜமைக்கா வீராங்கனைகள் ஆக்கிரமித்தனர்.
ஜமைக்காவின் ஷெல்லி அன் பிரேசர்-பிரைஸ் 10.67 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சக நாட்டவர்களான ஷெரிகா ஜாக்சன் வெள்ளிப்பதக்கமும் (10.73 வினாடி), ஒலிம்பிக் சாம்பியனான எலானி தாம்சன் ஹெரா வெண்கலப்பதக்கமும் (10.81 வினாடி) பெற்றனர். இங்கிலாந்தின் டினா ஆஷர் சுமித் 4-வது இடத்துக்கு (10.83 வினாடி) தள்ளப்பட்டார்.
35 வயதான ஷெல்லி அன் பிரேசர் உலக தடகளத்தின் 100 மீட்டர் ஓட்டத்தில் அறுவடை செய்த 5-வது தங்கம் இதுவாகும். ஏற்கனவே 2009, 2013, 2015, 2019-ம் ஆண்டுகளிலும் வாகை சூடியுள்ளார். இதன் மூலம் உலக தடகளத்தில் தனிநபர் ஓட்டத்தில் 5 தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
ஷெல்லி அன் பிரேசர் கூறுகையில், 'எனது வாழ்க்கையில் பல பின்னடைவுகளை சந்தித்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அதில் இருந்து மீண்டு வந்து விடுகிறேன். எனக்குள் உள்ள திறமையை கொண்டு 35 வயதிலும், அதுவும் குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து சாதிப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன். புதிய பயணத்தை தொடங்கும் வீராங்கனைகளுக்கு நான் உந்து சக்தியாக இருப்பதாக நம்புகிறேன்' என்றார்.