இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை பெற்று உள்ளது.
இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்கு சென்று சிறைகளின் நிலைகள், சுகாதாரம், பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து சிறைகளுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 6-வது அனைத்து இந்திய சிறைகளுக்கான சுகாதார போட்டி நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1,319 சிறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தேர்வு செய்யப்பட்டது. மேலும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு முதல் பரிசும், ஆந்திராவில் உள்ள மத்திய சிறைக்கு 2-வது பரிசும், தமிழ்நாடு மத்திய சிறைக்கு 3-வது பரிசும் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை சூப்பிரண்டு பி.எஸ்.ரமேஷ் கூறும்போது, பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த மாதம்(ஆகஸ்டு) 26-ந் தேதி இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
அப்போது சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் இடம், கைதிகள் உடல்நிலையை பராமரிப்பது, சிறையின் சுவரை சுத்தப்படுத்துவது, சிறையில் உள்ள கழிவறைகளை பராமரிப்பது, சிறையின் பாதுகாப்பு பணிகளை அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறையில் உள்ள கோப்புகளையும் அந்த குழு ஆய்வு செய்தது. அந்த குழுவினருக்கு ஏற்பட்ட திருப்தி காரணமாக பரப்பன அக்ரஹாரா இந்தியாவின் சிறந்த சிறையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு கிடைத்து உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.