சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எ னசென்னை மகளிர் நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த பெப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை 9ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை விசாரிப்பதற்கு நியமித்த, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு, ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
கடந்த மார்ச் 7ஆம் திகதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில்,ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கினை விசாரணைக்கு எடுத்த மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். மேலும் காவல்துறை தரப்பில் சுமார் 75 குற்ற நிரூபனச் சான்றுகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்தநிலையில், இன்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும், சிறப்பு விசாரணை குழு சமர்பித்த அறிக்கையை ஏற்று, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, தண்டனை விவரம் ஜூன் 2ம் திகதி அறிவிக்கப்படும் எனவும்,அதுவரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதி வழங்கப்பட்டமை குறித்து, காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இந் நிலையில், “யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? யார் அந்த சார் எனும் வழக்கின் முக்கியமான கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை ” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.