free website hit counter

உளவியல் தொடர்பான கண்ணோட்டம்.

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஆங்கிலத்தில் Psychology என அழைக்கப்படும் ஆன்மா அல்லது
ஆவி இயல்புகளை விளக்கும் இயல் என்பதே இதன் கருத்தாகும். பண்டைக்காலந்தொட்டு மனிதன் தனது உடலுக்குள் ஆன்மா என்னும் ஓர் உருவமற்ற பொருள் உறைவதாகவும் இதுவே உடல் இயக்கங்களுக்கான காரணப்பொருள் என்றும் கருதி வந்தான். இந்த ஆன்மாவின் இயல்புகளையும் செயல்களையும் ஆய்ந்தறியும் இயலாகவே முதலில் உளவியல் தோன்றியது.

இவ்வாறு தோன்றிய உளவியல் பல நூற்றாண்டுகள் வரை தத்துவ இயலின் ஒரு பிரிவாக இருந்து வளர்ந்து வந்தது. Aristotle என்னும் கிரேக்க அறிஞர் எழுதிய "ஆன்மாவின் இயல்புகள் " என்னும் நூலே உளவியலின் முதல் நூலாக கருதப்படுகிறது.

சில காலம் சென்ற பின் உளவியலின் ஆய்வுப்பொருளாக கருதப்பட்டு வந்த ஆன்மா பற்றி கருத்து வேற்றுமை எழுந்தது. இதனால் உளவியல் அறிஞர்கள் உளவியலை மனிதனது மனம் அல்லது உள்ளம் என்பதன் செயல்களை விளக்கும் அறிவுப்பிரிவு எனக்கருத தொடங்கினர். இவ்விளக்கமும் சில காலம் செல்ல மாறத்தொடங்கியது. இம்மாற்றத்தின் இறுதியில் உளவியலை நனவு நிலை செயல்களை விளக்கும் அறிவியல் என்று உளவியலாளர்கள் கருதத் தொடங்கினர்.

நனவு நிலை எனப்படுவது ஒருவன் அயர்ந்து தூங்குகையில் முற்றிலும் செயலிழந்து அவன் மெல்ல விழிப்படைய படிப்படியாக அதிகரித்துச்செல்லும் நிலையாகும். இவ்விளக்கத்திலும் குறைபாடு உள்ளதென்பதை காலப்போக்கில் உளவியலாளர்கள் உணர்ந்தனர்.

உளவியலாளருள் உளப்பகுப்புக் கோட்பாட்டாளர் மனிதனது நடத்தைக்கு முக்கிய காரணங்களாக அமைவன பெரும்பாலும் நனவிலி உள்ளத்தில் உறையும் ஆசைகளும் எண்ணங்களும் நோக்கங்களும் எனக்கூறினர். உளவியலை நனவு நிலைச் செயல்கள் பற்றிய இயல் என்று மட்டுமே கருதுவோமாயின் நனவிலி நோக்கங்களும் அவற்றால் ஊக்குவிக்கப்படும் செயல்களும் உளவியல் ஆய்வுக்கு புறம்பானவையாகிவிடும் எனவும் கூறினர்.

இக்காரணத்தால் இக்கால உளவியலாளருள் பெரும்பான்மையினர் உளவியலை மனிதனது நடத்தை பற்றிய அறிவியல் என கருதுகிறார்கள். இவ்விளக்கத்தில் உளவியலை பற்றிய முன்னைய விளக்கங்களும் அடங்கியுள்ளன எனலாம். பின்னர் உளவியல் மனித நடத்தையின் இயல்புகளையும் அதன் பொது விதிகளையும் பற்றியது என கருதப்படலாயிற்று.

பொதுவாக நடத்தை என்பதற்கு விரிவான விளக்கம் கொடுக்கலாம். புறத்தில் நின்று கண்டு அறியக்கூடிய உடலியக்கங்கள் மட்டுமன்றி சிந்தித்தல், பொருள் காணல், உணர்ச்சி வசப்படுதல் போன்ற உள்ளார்ந்த செயல்களும் உள்ளடங்கியதே நடத்தை எனப்படும்.

உளவியலில் நடத்தை என்பது தூண்டல்களால் தோற்றுவிக்கப்படுகிற துலங்கள்களை குறிக்கும். பொதுவாக இயக்கத்தையோ செயலையோ தொடங்கச்செய்யும் சக்தியினை தூண்டல்களாக வரையறுக்கலாம். தூண்டல்கள் உடலுக்குள் இருந்தோ புறச்சூழலில் இருந்தோ தோன்றும். உள்ளார்ந்த அல்லது அகவயப்பட்ட செயல்களின் அடிப்படையே உள்ளம் அல்லது மனம் எனப்படும் அருவப்பொருள் என பல உளவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். உள்ளம் என்னும் கருத்துப்பொருள் உளவியலின் இன்றியமையாத முதற்கோளாகும்.

19ம் நூற்றாண்டுக்கு முன்னர் உளவியல் தத்துவ இயலின் ஒரு பகுதியாக இருந்ததே தவிர தனியான அறிவியல் துறையாக விளங்கவில்லை. தத்துவ விசாரனைக்கேற்ற தர்க்க முறைகளே உளவியல் ஆய்வுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தத்துவ அறிஞர்களது தனிப்பட்ட கருதுகோள்களும் விளக்கங்களும் ஆதிக்கம் செலுத்தின. ஆகவே பண்டைய உளவியலை நிச்சயமான உன்மைகள் அடங்கிய அறிவுத்துறை என எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது.

பிற்பகுதியில் உளவியல் ஆய்வுகளில் பரிசோனை, அளவீடுகள் முதலிய திட்டமான முறைகள் கையாளப்பட்டன. இதன்விளைவாக உளவியல் அறிவுத்துறையின் ஒரு சிறப்புத் துறையாக வளரத்தொடங்கியது. 1879 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் ஆன்ட் என்பவர் லிப்சிக் நகரில் நிறுவிய முதல் உளவியல் ஆய்வுக்களம் உளவியல் ஆய்வில் ஒரு சிறந்த இடம் பெறுவதாகும். இதன் பின்னர் பல உளவியல் அறிஞர்களது இடையறாத முயற்சிகளினால் உயிரியல் போன்ற அறிவியல்களின் வரிசையில் ஒன்றென எண்ணத்தகும் வகையில் உளவியல் வளர்ச்சியுற்றது.

உள்ளம் என்னும் புதிரின் விளக்கம் உளவியலோ..!


Mahi..✍?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction