ஜாக்கிசானுக்கு (Jackie Chan) வயது 71. அவரது சினிமா வாழ்விற்கு இது 64 வது வருடம். எட்டு வயது முதல் சினிமாவில் பங்கு கொண்டுவரும் ஜாக்கி சான், 20 ஆம் நூற்றாண்டின் சினிமாக் கலாச்சாரத்தின் சின்னமாகவும், உலகின் மிக அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒருவராகவும், ஆசிய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமா இடையே ஒரு பாலமாகவும் விளங்குபவர்.
அதே போல் இயக்குனர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், சண்டைப் பயிற்சி இயக்குனர் மற்றும் பாடகர் போன்ற முழுமையான ஒரு திரை நட்சத்திரம்.
உலகெங்கிலும்பல தசாப்தங்களாக, பார்வையாளர்களுடன் இணையும் ஜாக்கி சானனின் திறமையும், எளிமையும், அவரை உலகளாவிய ரீதியில் மக்கள் கலைஞராக உருவாக்கியுள்ளது. அவருக்கு. லோகார்னோ78 திரைப்படவிழாவின் 09.08.2025 மாலை, பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில், அஸ்கோனா-லோகார்னோ சுற்றுலா மையம் வழங்கிய " பார்டோவாழ்நாள் சாதனையாளர் " விருது பெற்றார்.
இத்தனை சிறப்புக்களுக்கும், உயர்வுகளுக்குப் பின்னும் மிக எளிமையான மனிதராகவே காணப்படுகின்றார் ஜாக்கி சான். விருது வழக்குக்கு முன்னதாக, திரையரங்கு ஒன்றில், 1983ல் அவர் நடித்த 'ப்ராஜெக்ட் ஏ ' திரைப்படத்தின் திரையிடலுக்கு வந்திருந்த அவர், திரையரங்கில் நிறைந்திருந்த ரசிகர்களைப் பார்த்து, 40 வருடங்களுக்கு பின்னரும் இந்தப் படத்தை உண்மையில் ரசிக்கின்றீரகளா ? எனக் கேட்க ஆர்ப்பரித்தது அரங்கு.
படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சியின் ஒரு துள்ளல் பகுதியை எடுப்பதற்காக மட்டும் 7 நாட்கள் செலவிட்டதாகவும், அதற்குக் காரணம் " நான் ஒரு சூப்பர்மேன் அல்ல . மிகச் சாதாரணத்துக்கும் குறைவான திறமையாளனே " எனத் தன்னை எளிமைப்படுத்திக் குறிப்பிட்டார். அந்த எளிமையும், பணிவும், நகைச்சுவையும், சுறுசுறுப்பும், உழைப்புமே, அவரை முன்னணியில் இன்னமும் வைத்திருக்கிறது எனலாம்.
பியாற்சா கிரான்டே பெருமுற்றத்திற்கு செங்கம்பளத்தில் நடந்து வருகையில் இரண்டு 'பன்டா கரடி ' பொம்மைகளுடன் வந்த அவர், முற்றாக நிறைந்திருந்த பெருமுற்ற ரசிகர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செய்தார். செங்கம்பளத்தில் நடந்து வரும்போது, குறும்புக்களுடன் வந்தவர், மேடையில் பண்பும், பக்குவம் நிறைந்த கலைஞராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். " பார்டோ வாழ்நாள் சாதனையாளர்" விருதினைப் பெற்றுக்கொண்ட அவர், அவ்விருதினை தன்னடன் பணிபுரிந்த அனைத்துக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமர்பித்து மகிழ்ந்தார். " அடுத்த வருடம் தனது பட நிறுவனத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடவுள்ளதாகவும், குறிப்பிட்டார்.
இரவு பியாற்சா கிராண்டே பெருந்திரையில், இரண்டாவது படமாக ஜாக்கிசானின் 'பொலிஸ் ஸ்டோரி' திரையிடப்பட்டது. பியாற்சாகிரான்டே பெருமுற்றம் முழுமையாக நிறைந்திருந்த நிலையில், மற்றுமொரு பிரம்மாண்ட திரையரங்கமான, FEVI அரங்கில் பெருமுற்றக்காட்சிகளுடன், குறித்த திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்
- படங்கள் நன்றி:Locarno Film Festival / Ti-Press