தன்னுடைய ட்விட்டர் சமூக வலைப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்தும் வரும் முன்னணி நடிகர்களில் சித்தார்த் முக்கியமானவர்.
குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களை கடுமையாக விமர்சனம் செய்ய ட்விட்டரை அவர் பயன்படுத்தி வருகிறார். ஆளும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள், அரசியல், சினிமா என அனைத்து தளங்களிலும் சித்தார்த்த தனது எதிர் கருத்துகளைத் துணிவுடன் தயக்கமின்றி வெளியிட்டு வருகிறார். அப்படி வெளியிடும்போது சில நேரங்களில் சர்ச்சைகளிலும் சிக்குவார்.
தற்சமயம் தெலுங்கில் அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த், சர்வானந்த், அதிதிராவ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மகா சமுத்திரம். இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார் சித்தார்த். அதில் செய்தியாளர்கள் அவரிடம் துணிச்சலாகக் கருத்துகள் தெரிவித்து வருவது குறித்து கேட்டனர். அதற்கு சித்தார்த் பதில் கூறும்போது, “என்னுடைய எட்டு வயதிலிருந்தே நான் பொதுவெளியில் பேசி வருகிறேன். 'விஸ்வரூபம்' வெளியீடு சமயத்தில் கமல்ஹாசனுக்குப் பிரச்சனை ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசினேன். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மனப்பான்மைக்கு எதிராக நான் என்றுமே எதிரானவன். நான், சரி என்று நினைக்கும் விஷயத்தைப் பேசுவதால் வெறுக்கப்படுவதே மேல் என்று நினைக்கிறேன். என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது. மறைக்க எதுவுமில்லை.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    