free website hit counter

ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு அதிரடி நிறுத்தம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கார்த்தியை வைத்து சிறுத்தை, அஜித்தை வைத்து வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. அவருடைய இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வரும் படம்‘அண்ணாத்த’. சன் டிவி தயாரித்து வரும் இந்தப் படத்தை தீபாவளித் திருநாளில் வெளியிடத் தயாரிப்பாளர் தரப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் இப்படத்தின் படப்பிடிப்பை வேக வேகமாக முடித்து வருகின்றனர். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கும் காட்சிகளை படமாக்கும் பணிகள் லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனிதத் தலமான இமாம்பாடாவில் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்றன.

அக்காலத்தில் அவத் எனும் பெயரில் அழைக்கப்பட்ட இப்பகுதியை ஆண்ட அஸப் உத் தவுலா என்பவரால் இமாம்பாடா 1784-ல் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தில் பல்வேறு பாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புதான் முதல் தமிழ் படமாக அங்கே நடைபெறுவதாக படக்குழுவினர் கூறி வந்தனர். இதற்கிடையே லக்னோவில் ரஜினி நடிக்க வந்துள்ளார் என்று நினைத்த சுற்றுவட்டாரப் பொதுமக்கள் அங்கே அவரைக் காணத் திரண்டனர். ஆனால், இந்தப் படப்பிடிப்பில் ரஜினி இல்லை என்று தெரிந்ததும் கோபம் கொண்டு படக்குழுவினர் மீது சிலர் கற்களை வீசினர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் அங்கே வந்தது. பிரச்சினை பெரிதாவதை அறிந்த ஷியா தலைவர்களில் ஒருவரான மவுலானா சைப் அப்பாஸ், படப்பிடிப்பை தொடர எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து மவுலானா அப்பாஸ் கூறும்போது, “கரோனா பரவல் காலத்தில் இங்கு ரஜினிகாந்தின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது ஏன்? இதில், பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போது முஸ்லிம்களின் தியாகத் திருநாளான முஹர்ரம் மாத துக்க நிகழ்வுகளும் இமாம் பாடாவில் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளன. இச்சூழலில் படப்பிடிப்பிற்கு தடை விதிக்காதது ஏன்?” எனக் கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஷியா பிரிவை சேர்ந்த சிலர் கூட்டமாக கூடி நின்று படப்பிடிப்பிற்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். இதனால், ரஜினி படத்தின் படப்பிடிப்பு சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு எடுக்கப்பட்ட இரண்டு காட்சிகளை பயன்படுத்துவதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இயக்குநர் இருப்பதாக படக்குழுவிலிருந்து தகவல். ரஜினி கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில் லக்னோ நகரில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction