சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜூலை 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற முனைப்பில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் சென்னையிலும், நவம்பர் மாதம் கோவையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
இதேபோல் இந்த ஆண்டு மார்ச் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற சர்வதேச அணிகலன்களுக்கான பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிலும் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
அது மட்டுமின்றி துபாய், அபுதாபி போன்ற நாடுகளிலும் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் மட்டும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய வகைகளில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.
மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை சந்திப்பதற்கும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.