free website hit counter

தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் 15 ஆம் திகதி ஆரம்பம் - அனுமதிக் கட்டணங்களும் அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பல புதிய அனுபவங்களை வழங்க கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.

உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் இருப்பதைப் போன்ற பொழுதுபோக்கு மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங் (Sky diving ) மற்றும் பங்கி ஜம்பிங் (Bungee jumping) ஆகியவையும் இதில் அடங்கும்.

தாமரைக்கோபுரத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நுழைவுச் சீட்டைக் கொள்வனவு செய்து, அனைவரும் இதனைப் பார்வையிடவும் புதிய அனுபவங்களை பெறவும் முடியும்.

நுழைவுச் சீட்டொன்றின் விலை 500 ரூபா என்பதோடு விசேட நுழைவுச் சீட்டின் விலை 2,000 ரூபாவாகும். பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க டொலர்களாகும். அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக QR தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம், பிரபலமான உணவகங்கள், பப் (Pub) மற்றும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தளம் , அலுவலக வசதிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் டிஜிட்டல் சினிமா அனுபவத்தைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மிகவேகமாக இயங்கக்கூடிய மூன்று மின் தூக்கிகள் தாமரைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து அனுபவங்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்த்தும் அனுபவித்தும் மகிழ முடியும் என்று கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction