நாட்டு மக்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகியுள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனைத் தாங்க முடியாத அரசாங்கம் தற்போது அடக்குமுறை, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார, பாசிச வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், ‘ஜனநாயகத்தின் போர்க்களத்தில் போராடும் போராளிகளை தண்டிப்பதே அரசாங்கத்தின் வேலையாக இருக்கின்றது. அரசாங்கத்தின் இயலாமை, தோல்வி மற்றும் உணர்வற்ற தன்மையை மறைக்க ஜனநாயக அரசியல் அரங்கில் உள்ள ஆர்வலர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களை தண்டிக்க எந்த வகையிலும் அனுமதிக்க போவதில்லை.” என்றுள்ளார்.
