வெசாக் பண்டிகைக் காலத்தில், தீவு தழுவிய சிறப்புப் பாதுகாப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் உதவி கண்காணிப்பாளருமான (ASP) எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
வெசாக் வாரத்தில் அனுசரிக்கப்படும் பண்பாட்டு மற்றும் சமய விழுமியங்களுக்கு முரணான நடத்தையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் வலியுறுத்தினார்.
“இலங்கை பொலிஸ், நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறப்புப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்தை வகுத்துள்ளது. சமயத் தலங்களில், குறிப்பாக தானசாலைகள் மற்றும் வெசாக் மண்டலங்களின் அருகாமையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சாதாரண உடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளும், புலனாய்வு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் மீண்டும் ஒருமுறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறோம்,” என்று அவர் கூறினார்.
மேலும், எந்தவொரு வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டி ஆகியவை பொறுப்பற்ற, அபாயகரமான அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் இயக்கப்படுவது குறித்த தகவல்களை 070-4755600 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது 119 மற்றும் 188 என்ற அவசர உதவி எண்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.