நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு,
கிங்ஸ்லி உள்ளிட்ட பலரது நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பீஸ்ட்’.சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக்குத்து’ தற்போது இணையத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது. இந்தப் பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரது நடன அசைவுகளை முன்வைத்து பலரும் தங்களுடைய நடனத்தை குறுங்காணொளிகளாக வெளியிட்டு வருகிறார்கள்.
அனிருத் இசையில் இந்தப் பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் - ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.‘அரபிக்குத்து’ நேற்று விருது வழங்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம், ‘அரபிக்குத்து பாடலுக்கு விஜய் என்ன சொன்னார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன் கூறிய பதில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. “‘அரபிக்குத்து’ பாடலை முன்பே படமாக்கி முடித்துவிட்டார்கள். சமீபத்தில் தான் ப்ரோமோ வீடியோ ஷுட் செய்தோம். அப்போது தான் விஜய் சார் தொலைபேசியில் “சூப்பர் பா. எழுதிக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் மொழியில எல்லாம் பயங்கரமா எழுதுறியே..!” என்றார். நான் ‘உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லையே சார். அனிருத் பாதி பாடிவிடுவார், நாம் சும்மா விட்ட இடத்தை நிரப்ப வேண்டியது தான்’ என்று கூறினேன். அவருக்கு ‘அரபிக்குத்து’ பாடல் ரொம்பவே பிடித்துள்ளது. முதல் தடவைக் கேட்ட உடனேயே இது பெரிய ஹிட் என்று அனிருத்திடம் தெரிவித்துள்ளார் விஜய் சார்” என்று தெரிவித்திருக்கிறார்.