நடப்பாண்டில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், தமிழகத்தை சேர்ந்த குருவாயூர் துரை.கே.தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), எம்.டி.ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்பா சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகிய 10 பேர் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இவ்விழாவில்,நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் அஜித் குமாருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான அஜித் குமாருக்கு நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்தியுள்ளார்.