free website hit counter

பங்குனியும் உத்ததரமும்

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பங்கு= நீ ,என்பது பங்குனி மாதம் எனக் கொண்டு உத்தர நட்சத்திரமாகிய நாளில் இருமனங்கள் இணையும் திருமணநாளாக ஆலயங்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.

மானிடர்க்கு ஆதிகாலம் முதல் இக்காலம் வரையிலும் இல்லற வாழ்க்கையில் பங்கு கொள்ள வென இந்நாள் மிகவும் இன்ப நாளாக ஆணும் பெண்ணும் இணையும் திருமண நாளாக இப்பங்குனி உத்தர நன்னாள் விளங்குகிறது. தேவர்கள் பூமாரி பொழிய தெய்வத் திருமணங்கள் பல நடைபெற்ற இனிய நாளிது. இப்பங்குனி மாதத்தில் ஒவ்வொரு வாரமும் வருகின்ற திங்கள் கிழமை பங்குனித்திங்கள் எனப்படும் அந்நாளில் சக்தியாகிய அம்பிகையை வழிபடுவர்.

இந்த பங்குனி மாதத்தின் பெயருக்கு ஏற்ப இல்லறத்தில் இணையும் தம்பதிகள் வாழ்க்கையை சரிபாதியாக பங்கு போட்டுக் கொண்டு இன்பம் துன்பம் வரவு செலவு இஸ்டம் கஸ்டம் இப்படிஎதிலும் பங்கு போட்டுக்கொண்டு வாழ்வாராகில் எக்காலத்திலும் எவரும் மெச்சும்படி வாழ்வார்கள். எந்த மாதத்தில் திருமணம் புரிந்தால் என்ன/ மனம் கொண்டது மாளிகை என்பதற்கு இணங்க எம்மனதில் எம்மோடு இணைந்து வாழ வந்த துணையுடன் வாழ்க்கையை பங்கு போட்டுக்கொண்டு வாழவே அந்த இல்வாழ்க்கை சீரிய வளம் நிறைந்ததாக அமையும்.

அந்நாளில் தெய்வத்திருமணங்கள் இதே பங்குனி உத்தர நன்னாளில் நடைபெற்றிருக்கின்றன.என புராண வரலாறுகள் கூறுகின்றன.சிவனுக்கும், உமையம்பிகைக்கும் இராமருக்கும், சீதாவுக்கும், முருகனுக்கும் தெய்வானைக்கும் இனிய திருமணநாளாக இன்று வரையிலும் உற்சவங்கள் கோவில்களில் கொண்டாடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.அதற்கு காரணம் எமது பாரம்பரிய இந்துப்பண்பாடு அதற்கும் மேலான இறை நம்பிக்கை. ஆம் சேர்ந்தே இருப்பதும் எல்லாவற்றையும் அனுபவிப்பதும், கூட்டாக வாழ்வதிலும் தான் வாழ்வு பூரணமடைகிறது.

ஆற்றல் உடையவனைவிட்டு அவன் ஆற்றலைமட்டும் பிரிக்க முடியாது. அக்னியும் சூடும் போல் இருவரும் இனைந்தே இருப்பர்,அப்படி இணைந்து இருக்கும் இறைவனும், இறைவியும் சரிபாதியாக விளங்குகின்றனர். சேர்ந்து இருப்பதே பூரணத்துவம் நிறைந்ததாகும். ஆலயங்களில் மூர்த்தி , தலம், தீர்த்தம் என்று அழைக்கப் படும் மூன்றும் தெய்வ சாந்நித்தியத்தில் நிறைவான சிறப்புபெறுவன.

அப்படி விளங்குவது மட்டுமல்லாது சக்தி வழிபாட்டில் அம்மன் ஆலயங்களில் சக்தி பீடமாக விளங்கும் ஶ்ரீ சக்கரத்தில் சம்காரசக்கரம், ஸ்திதி சக்கரம் ,சிருஸ்டி சக்கரம் எனும் மூன்றிலும் அம்பிகை பொருந்தியுள்ளாள் , அதுபோல் மும்மூர்த்த்திகளிடத்தும் அவரவரது உலகில் சிவனுக்கு பார்வதியாக, விஸ்ணுவுக்கு இலக்குமியாக, பிரம்மனுக்கு சரஸ்வதியாக விளங்கி வருகிறாள் ஶ்ரீ வித்தையில் ஜாலந்தர பீடம் ,காமகிரி பீடம்,ஒட்யாண பீடம் எனும் முப்பீடங்களில் முப்புரையாக எழுந்தருளி அருள்செய்கிறாள்.

இப்படி பல சிறப்புக்கள் வாய்ந்த இச்ஶ்ரீ சக்கரத்தில் சிவமும் சக்தியும் மகாமேரு எனப்போற்றப்படும் இணைந்து அதில் உறைகின்றனர். உலகை முத்தொழிலாற்றி இயக்குகின்றனர். தீபத்தில் பிரகாசமாய் சூரியனின் சுடராய் சந்திரனின் ஒளியாய்,மண்ணில் உயிராய் விண்ணில் மழைமேகமாய், காற்றின் சுவாசமாய்,நீரின் குளிர்ச்சியாய், நெருப்பின் சூடாய் இப்படி ஒரு வஸ்துவில் இரு பரிமாணங்களாக ஐக்கியமாகி ஒன்றுடன் ஒன்று கலந்தே இருப்பர்,. இதேபோல் ஜீவனுள் சிவமும், உணர வைக்க சக்தியும் சேர்ந்தே இருப்பர். இப்படி சிவசக்தியாக விளங்கும் அன்னை நெற்றியில் திலகம் அணிந்தும் உச்சிவகிட்டில் திலகம் குங்குமம் அணியும் அழகுக்கும் ஆதிசங்கரர் செளந்தர்ய லகரியில் பொருள் கூறுகிறார் அம்பிகையின் தலைவகிட்டினை இருகூறாக்கி வகிட்டின் முகட்டில் அம்பிகை உச்சித்திலகத்தை இட்டிருக்கிறாள் . அதாவது சீமந்தஸரணி என்னும் தலைவகிடும் முகட்டில் இடப்படும் உச்சித்திலகமும் நலம் பயக்கட்டும். இப்படி வாழ்த்துக் கூறுகிறார் என்றால் குங்குமத்தை அம்பிகை உச்சியில் அணிந்து பெண்களாகிய எம்மை தீர்க்க சுமங்கலிகளாக வாழும்படி காக்கிறார்.

செந்நிறத்தவளாகிய ஶ்ரீ இராஜ இராஜேஸ்வரி வடிவில் தோன்றும் அம்பிகை அபிராமிப்பட்டரால் உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே. ஆக உதிக்கின்ற ஞாயிறு போல் புலரும் காலையில் உதிக்கும் செந்நிறமாய் இருளை விலக்கி எழும் செங்கதிரவன் போல் உச்சியில் திலகம் ஜொலிக்கின்றது.

அப்படி இருள்விலகிட சூரியன் உறுதுணையாவது போல் மானிடர் வாழ்வு புலரவேண்டி அன்னை செங்கதிராய்த் திகழ்கிறாள்.உணர்வு மிக்கோர்
மதிக்கும் மாணிக்க கல்லாக ஒளிர்கின்றவள் .மாதுளம் பூநிறத்தினை ஒத்தவள் தாமரை மலரில் உறையும் திருமகள் வழிபடும் மின்னல்கொடியாள் இப்படியானவள் மெல்லிய மணமும் குளிர்தன்மையும் கூடிய குங்குமச் சாந்தின் நிறத்தவள் குங்கும தோயம் என்பது அம்பிகைக்குரிய அறுபத்துநான்கு உபசாரங்களில் ஒன்றாகும், விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.விதிவசத்தில் துன்புறுவோர் எப்பிறவியிலும் துணையாக வரவேண்டும் என அபிராமியை துதித்தால். துணையும் தொலையாது. வாழ்வும் தொலையாது.

அன்னை பொதுநலமிக்கவளாக அகில உயிர்களையும் காப்பவளாக திகழ்ந்தாள். சிவத்தையும் காத்து தன்னையும் காத்து அனைத்து உயிர்களையும் காத்து இரட்சித்தாள். அதை அபிராமிப்பட்டரே அந்தாதியில் பாடுகிறார் பொருந்திய முப்புரை செப்புரை எனத்தொடங்கி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை என்கிறார். அதாவது நீண்ட சடாமுடியை உடைய சிவபிரான் தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறவேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது வாசுகிபாம்பு கக்கிய ஆலகாலவிசத்தை அப்படியே எடுத்து விழுங்கி விட்டார்.

அப்படி உண்ட நஞ்சுச்செய்தியை யோக நெறிச்செய்தியாக, மூலாதாரத்தில் உள்ள நஞ்சாற்றலைக் குண்டலினி யோகப்பயிற்சியின் மூலம் சகஸ்ராரத்தில் அமுதமாக்கினார். அன்னை. அதாவது சிவன் அருந்திய நஞ்சை வயிற்றுக்குள் செல்லாதவாறு கழுத்தில் தடுத்து நிறுத்தினாள். தடுக்காவிடில் வயிற்றுக்குள் சென்று அண்டசாரசரங்களின் உயிரினங்கள் அனைத்தும் அழிந்திருக்கும். இப்படி அகிலலோகமாதாவாகத் திகழ்ந்து சர்வேஸ்வரனின் இணைபிரியாத சக்தி செம்மையானவள்,செம்மை என்பது நிறைவுக்கும், முழுமைக்கும், உயிர்த்தன்மைக்கும், நேர்மைக்கும், நன்மைக்கும், மங்களத்துகும் அடையாளமாகும். அவ்வளவு சிறப்புடைய அம்பிகையின் மங்கல குங்குமத்தை எந்நாளும் சுமங்கலிகள் உச்சி வகிட்டிலும்  நெற்றியிலும் குங்குமம் அணிந்து மங்களமாய்த் திகழ்வார்களாக.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction