எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
இந்தக் கப்பல் விபத்துக்களினால், கேரளப்பகுதி கடல் மட்டுமல்லாது, அண்டைய கடற்கரைப் பிரதேசங்களும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையின் வடபுலக் கடற்கரைப்பிரதேசங்கள் சிலவற்றில், அன்மைக்காலமாக சேருகின்ற கழிவுகளும், இதனால் ஏற்பட்டிருக்கவும் கூடும். இந்த விபத்துக்களின் பாதிப்பு நேரடியாக மக்களைப் பாதிப்பது ஒரு புறமமெனில், இந்த விபத்தின் கசிவுகளால் கடல் வாழ் உயிரினங்களும், கடல்வளங்களும் அடையக் கூடிய மாசுபாடும், மாறுபடும், நீண்ட காலப்பாதிப்பினைத் தரக் கூடியவை.
இந்தக் கப்பல் விபத்துக் குறித்து, Marine Engineer கப்பல் பொறியியலாளரான தர்மராஜ் (Dharmaraj Edumban ) அவர்கள் தனது பேஸ் புக் தளத்தில் விரிவான ஒரு பதிவினைச் செய்துள்ளார். ஒரு விபத்து; விபத்தின் பின்னால் இருக்கக் கூடிய பாரிய மீட்புப் பணிகள் என நாம் எண்ணிப் பார்த்திராத விடயங்களைத், துறைசார் அறிவோடு மிக எளிமையாகத் தந்துள்ளார். அவருக்கான நன்றிகளுடன், 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம்.- 4Tamilmedia Team
கேரளா கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் Wan hai 503 என்ற சிங்கப்பூர் நாட்டு கப்பல்
பொதுவாக எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் தான் ஆபத்தானவை என பலரும் நினைப்பார்கள். ஆனால் அவை 100% உண்மையல்ல, அனைத்து வகை கப்பல்களுமே ஆபத்தானவை தான். அதனால்தான் கப்பலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அதிகமாகவும் சிறப்பாகவும் இருக்கும் வகையில் கப்பலை வடிவமைப்பார்கள் மற்றும் இயக்குவார்கள்.
இந்த கப்பல் கண்ட்டைனர்களை ஏற்றிச்செல்லும் கப்பல். புறப்பட்டு 44 நாட்டிகல் மைல் சென்றபிறகு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பிக்கிறது , அதனை தொடர்ந்து சில கண்ட்டைனர்கள் வெடித்தும் சிதறியுள்ளது.
இதற்கு காரணமாக அந்த கண்ட்டைனரின் உள்ளே ஏற்றி செல்லப்பட்ட ஆபத்தான பொருட்களாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 150 கண்ட்டைனர்களில் IMDG என சொல்லக்கூடிய ஆபத்தான பொருட்கள் ஏற்றிசெல்லப்பட்டுள்ளது. பொதுவாக என்ன வகையான பொருட்களை ஏற்றி செல்கிறோம் அந்த பொருட்களின் தன்மை என்ன
என்பது குறித்த Dangerous goods manifest கொடுத்தபிறகு தான் ஏற்றி செல்லமுடியும். இங்கு எப்படி என பிறகு தான் தெரிய வரும்.
இந்த கப்பலில் ட்ரைகுளோரோ பென்சின், எத்திலின்,டெட்ராமைன் போன்ற இன்னும் பல கெமிக்கல்கள் ஏற்றி செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக 32 டன்கள் நைட்ரோ செல்லுலாஸ் இருந்ததாக கூறுகிறார்கள். இது ஆல்கஹாலில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். இது உராய்வு ,வெப்பம்,ஆல்கஹால் அற்ற நிலை என ஏதேனும் காரணங்கள் இருப்பின் எளிதில் தீப்பற்றி எரியும் தன்மை உடையது .
விபத்தின் போது நிச்சயமாக ஏதாவது ஒன்று இதுபோல நிகழ்ந்திருக்கும்,. வேதி வினையில் நீட்சியாக வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்திருக்கும். இதில் என்ன சிக்கல் என்றால் ஒரு கண்ட்டைனர் வெடித்து தீப்பிடித்து எரிந்தால் மற்ற IMDG பொருட்கள் உள்ளவைகள் தீப்பற்றி எரியும். இது தான் அங்கு நடந்துகொண்டிருக்கிறது.
தீயில் A B C D என வகைகள் உள்ளன. அனைத்து வகையான தீயும் இணைந்து எரிவதால் தீயை அணைப்பது மிகவும் கடினமான வேலை அதுவும் கடலில். 50% தீ அணைக்கப்பட்ட தகவல் வந்துகொண்டுள்ளது. முழுவதும் அணைத்து மிகப்பெரும் ஆபத்தை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதல்.
இதில் கவலை தரும் விஷயம் என்னவென்றால் 2240 டன்கள் கப்பல் என்ஜினுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இருப்பதுதான். பொதுவாக accommodation என சொல்லப்படும் தங்குமிடம் இருக்கும் பகுதியில் தான் இந்த டேன்ங் குகள் இருக்கும். இந்த பகுதிக்கு தீ பரவி வருவதற்குள் தீயை கட்டுப்படுத்தி ஆக வேண்டிய மிகப்பெரும் சவால் இருக்கிறது. கூடவே கப்பல் Drifting என சொல்லப்படும் தானாகவே காற்றின் திசையில் அலைந்து வருவதும் ஆபத்தானது.
கப்பலை கட்டி இழுத்து செல்ல எரியும் கப்பலில் ஏறி கயிற்றை மாட்டுவதும் மிகப்பெரும் சவால். கரைக்கு அருகில் வராமல் கப்பலை நிலைநிறுத்த வல்லுநர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவார்கள். இது ஒருபுறம் இருக்க எரியும் கண்ட்டைனர்களாலும் ,கடலில் விழும் கண்ட்டைனர்களாலும் கப்பலின் சமநிலைமாறி ஒருபுறம் சாய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
இதுபோன்ற பல சவால் நிறைந்த பணியை இந்திய கடலோர காவல்படையும் இந்திய கடற்படையும் செய்துவருவது பாராட்டுக்குறியது.
கேரளா மற்றும் தமிழக கேரளா எல்லையோர மீனவர்கள் மிகவும் கவனமுடனும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய நேரம் இது. மிதந்து வரும் எந்த பொருட்களையும் தொட வேண்டாம் மற்றும் நிலமையை கூர்ந்து கவனித்து அரசின் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.
நன்றி : தர்மராஜ் Dharmaraj Edumban