2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சோடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் மோதல் உள்பட 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வந்தார். வெள்ளை மாளிகையில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த டொனால்டு டிரம்ப், "அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே நோபல் பரிசு கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார் என்று அவருக்கே தெரியாது. அவர் ஒன்றும் செய்யவில்லை. நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் வெனிசுலாவைச் சேர்ந்த மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருப்பது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.