காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், திமுக கூட்டணி தொண்டர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டு கொடியுடன் பங்கேற்றனர்.
அதில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறோம். கடந்த ஓராண்டாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உணவுப் பொருள் ஏற்றி வந்த லாரிக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் 45 பேரை சுட்டுக் கொன்றது இஸ்ரேல் ராணுவம். அது என்னுடைய இதயத்தை நொறுக்கியது. இந்த அநீதியை கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் வருமா?
காசாவில் இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கிற தாக்குதலால், பச்சிளம் குழந்தைகள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகிறார்கள். இந்த இனப்படுகொலையை கண்டித்து மனிதநேய சிந்தனை கொண்ட அனைவரும் கண்டிக்க வேண்டும். அதனடிப்படையில்தான் தமிழ்நாடு கண்டிக்கிறது. காசா இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.