ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் உணர்ச்சி பொங்கப் பேசியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக் குறித்து ராகுல் காந்தி கருத்துத் தெரிவிக்கையில்,” கேமராக்கள் முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்? “ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"இந்திய மக்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.பாரத மாதாவின் சேவகனான நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும்.ஆனால் ரத்தம் கொதிக்கிறது. என் நரம்புகளில் கொதிக்கும் குங்குமம் பாய்கிறது" எனப் பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது பேசியிருந்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில், "பழிவாங்குவதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்படவில்லை. தர்மத்தை காப்பதற்காகவே அது தொடங்கப்பட்டது. இது தான் பயங்கரவாதத்தை அழிக்கும் வழி. இது தான் இந்தியா; புதிய இந்தியா" எனக் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரின் இந்த உரையினை விமர்சித்த எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “மோடிஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள். பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் நம்பியது ஏன்?, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?, இந்தியாவின் கௌரவத்தை நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்களா? " எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார் எனத் தெரிய வருகிறது.