2024 ஆமாண்டளவில் சில தசாப்தங்களுக்குப் பின்னர் முதன் முறையாக சந்திரனுக்கு மனிதர்களைச் செலுத்தவுள்ள நாசா 2033 இல் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இத்திட்டங்கள் குறித்து செவ்வி அளித்த நாசா தலைமை இயக்குனர் ஜிம் ப்ரிடென்ஸ்டைன் 2024 நிலவுக்கு மனிதனைச் செலுத்தும் செயற்திட்டத்துக்காக அதிகளவு நிதியுதவியைப் பெற அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் இன்னும் 5 வருடத்தில் அதாவது 2024 இல் எப்படியாவது விண்வெளி வீரர்கள் மற்றுமொரு முறை நிலவுக்குத் திரும்ப நாசா ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். ஆனாலும் SLS எனப்படும் பாரமான விண்வெளி ஓடங்களைக் காவிச் செல்லும் ராக்கெட்டு ஏவுதல் பொறிமுறையை அபிவிருத்தி செய்வதில் நாசா தொடர்ந்து தாமதம் காட்டி வருவது குறித்த இந்த இலக்குகளை உரிய நேரத்தில் அடைய சவாலாக உள்ளது.
இதற்குப் பதிலாக வர்த்தக அடிப்படையிலான ராக்கெட்டுக்களான டெல்ட்டா IV மற்றும் ஸ்பேஸ் X இன் Falcon பாரம் மிகுந்த் ராக்கெட்டு போன்றவையும் தொழிநுட்ப அடிப்படையில் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளன. செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் மூலம் பயணிக்க குறைந்தது 6 மாதம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் அமெரிக்க அரசாங்கத்தின் நாசாவுக்கானா பட்ஜெட்டான 21 பில்லியனில் பாதியை சந்திரனுக்கான மனிதர்களது பயணத்துக்கும், செவ்வாய்க் கிரகத்துக்கான பயணத்துக்கும் செலவிடவென நாசா திட்டமிட்டுள்ளது.