free website hit counter

சர்வதேச ஜாஸ் இசைத்திருவிழாவில் தமிழ் !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நோர்வேயின் இரம்மியம் மிக்க அழகையும் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களையும் தன்னகத்தே கொண்ட சிறிய நகரம் மொல்டே.

நோர்வேயின் மூன்றாவது மிகப்பெரிய துறைமுகமான கெயர்ரேஞசர் ( Gerianger), பூதத்தின் மலைச்சாலை (The Trolls’ path) மற்றும்  அத்திலாந்துப் பெருங்கடல்சாலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கடல்நீர்ஏரிக் கிரமம்தான் இந்த மோல்டே. இந்த நகரம் வரலாற்றில் மீண்டும் முக்கிய சம்பவங்கள் நிகழும் இடமாக அமைந்துவிட்டது. பார்க்கச் சலிக்காத காட்சிகளையும் மனதிற்கு இதமான இயற்கையையும் கொண்ட அமைந்த இந்த நகரம் இயற்கை தன்னை தாராளமாக அழகுபடுத்திக் கொண்ட நோர்வேயின் பல நகரங்களில் ஒன்று.

கோடைகாலத்தின் நடுப்பகுதியில் வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிகழ்வு சர்வதேச ஜாஸ் இசைத்திருவிழா. உலகப் புகழ்பெற்ற ஜாஸ்இசைக்கலைஞர்கள் பங்குபற்றும் இத்திருவிழா எப்போதும் பரபரப்பும் உற்சாகமும் கொண்டாட்டமும் கொண்டதாக பல்லாயிரக்கணக்கான மக்களை தம்பக்கம் இழுத்துக் கொள்ளும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. வருடத்தின் 29 வது (யூலை19-24 வரை) வாரத்தினை அலங்கரிக்கும் இத் திருவிழா இந்த ஆண்டு தனது 60 வயதை செழுமையுடன் கொண்டாடுகிறது. முதலில் இசைத்திருவிழாவிற்கு மனங்கனிந்த 60வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

இந்த இசைத்திருவிழா வருடாவருடம் மிகவும் ஆர்வம் மிக்க தொண்டர்கள் மற்றும் கலைஞர்கள் பலரின் பங்களிப்புடன் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா இந்த ஆண்டு தனது சிகரத்தை எட்டியுள்ளது என்று தான் கூறவேண்டும். ஆம் வரலாற்றில் முதல் தடவையாக இசைத்திருவிழாவின் முதன்மை ஏற்பாட்டாளராக ஒரு பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் Mariann Bjørnelv, பியோன்எல்வ்.

ஒரு அநுபவமிக்க இசைக்கலைஞர் என்பதோடு பல்வேறுபட்ட இசைவிழாக்களின் பொறுப்பாளராக செயற்பட்ட பரந்த அநுபவத்தையும் கூடவே கொண்டுள்ளவர் இவர். இதன் விளைவாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விழாவின் ஆரம்பித்து வைக்கும் இசைக்கலைஞராக முன்னாள் கலாச்சார அமைச்சர் Åse Kleveland இருப்பதோடு வரலாற்றில் முதல் தடவையாக ஐம்பது வீதமான கலைஞர்கள் பெண்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொல்டேஜாஸ் இசைத்திருவிழா 1961 இல் ஆரம்பமானது. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் ஆரம்பிக்கப்படும் இத்திருவிழா ஆறு நாட்கள் வரை நீடிக்கும். இவ்விழாவில் சர்வதேச, கிராமிய, தேசிய மற்றும் உள்ளூர் இசைக்கலைஞர்களின் கலைவடிவங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இவ் இசை விழாவில் இந்த ஆண்டு சுமார் 15 வெவ்வேறு அரங்கங்களில் 70 கச்சேரிகள் வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் நோர்வேயில் பிரசித்தி பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் சர்வதே ரீதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பையும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும் இம்மாதிரியான மாபெரும் இசை விழா இந்த ஆண்டு 300 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மூலமே சாத்தியமாகிறது. இவ்வாறானவரலாற்று தொண்மை கொண்ட இந்த இசைவிழாவில் இந்து சமூத்திரத்தின் கண்ணீர் துளியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கைத் தீவின் வடக்கை தாயகமாக கொண்ட புலம்பெயர்ந்தவர்களின் அடுத்த தலைமுறையினரான மீரா திருச்செல்வம் மற்றும் தீபா திருச்செல்வம் ஆகிய இருவர் அங்கம் வகிக்கும் ' 9 பாகை வடக்கு'எனும் இசைக்குழுவும் அங்கம் பெறுவது சிறப்பு.

2016 ல் ஆரம்பிக்கப்பட்டு , பல்வேறு இசைநிகழ்ச்சிகளிலும் பங்குபற்றிச் சிறப்பித்த இந்த இசைக்குழு, இன்று தமது புதிய பாடலை அரங்கேற்றுகின்றனர். அந்தப் பாடல் தமிழிலேயே பாடப்படுகிறது என்பது மேலும் சிறப்பு. "பிறந்தேன் ... " என ஆரம்பிக்கிறது இப்பாடல் . பாடலுக்கான வரிகளும் இவர்களுடையது என்றே கருதுகிறேன். அவர்களில் இசைப்பயணத்தில் பெருமித்த கணங்களில் ஒன்றாக இதுஅமையும். அந்த இளம் செல்வங்களின் இசைப்பயணம் மேலும் பல சிகரங்களைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகின்றோம் !

- 4தமிழ்மீடியாவிற்காக: தங்கம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula