இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படும்.
பல பொருட்களுக்கான இறக்குமதி தடையை தளர்த்த அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சுங்க வருமானத்தை அடைவதற்காக இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடாந்த வருமான இலக்கு தொடர்பில் சுங்க அதிகாரிகளுடன் நேற்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலக்கு 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ. 270 பில்லியன் சுங்க வருமானமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் தற்போதைய வருமானம் எதிர்பார்த்த வருமானத்தில் 12% க்கும் குறைவாகவே உள்ளது என இராஜாங்க அமைச்சர் கூறினார்.
தற்போது பல பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"2021 இல் 485 பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது, அது 2022 இல் 750 பொருட்களாகத் திருத்தப்பட்டது. மேலும், மார்ச் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் சுங்க வருமானத்தை கடுமையாகப் பாதித்தது," என்று அவர் கூறினார்.
எனவே எதிர்காலத்தில் இறக்குமதி தடையை தளர்த்துவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Comments powered by CComment