counter create hit மூலிகை அறிவோம் - கிருமிகளை விரட்டும் வசம்பு

மூலிகை அறிவோம் - கிருமிகளை விரட்டும் வசம்பு

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வசம்பு என்றாலே முதலில் நினைவில் வருவது அதன் நறுமணம் தான்.
இயற்கை அதற்கு அளித்துள்ள ஒருவித வேதியியல் சத்தினால் பல அரிய மருத்துவ குணங்களையும் சிறந்த நறுமணத்தையும் உடையதாக காணப்படுகின்றது. சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நிச்சயம் வசம்பு இருக்கும். குழந்தைகளை கிருமி தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கவும் அவர்களுடைய வயிறு சம்பந்தமான வியாதிகளுக்கு ஓர் ஈடற்ற மருந்தாக விளங்குகின்றது. இவ் வாரம் வாச வசம்பின் மருத்துவ பயன்களை அறிந்து கொள்ளலாம்.

தாவரவியல் பெயர்- Acorus calamus
குடும்ப பெயர்- Araceae
ஆங்கிலப் பெயர்- sweet flag
சிங்கள பெயர்- Wadhakaha
சமஸ்கிருத பெயர்- Vachaa, Ugragandhaa,
Ugraa, Golomi, Shadgranthaa,
Shataparvaa, Tikshnagandhaa,
Kshudra-patra, Maangalyaa,


வேறு பெயர்கள்-
உக்கிரம், பிள்ளை வளர்ப்பான், வசம், வசை, வேணி

பயன்படும் பகுதி-
வேர்

சுவை- கார்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

வேதியியல் சத்துக்கள்-
Beta- asarone
Volatile oil type II, III, IV
Alpha-asarone

மருத்துவ செய்கைகள்-
Antiperiodic- முறைச்சுரமகற்றி
Analgesic - துயரடக்கி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Disinfectant- தொற்றுப்புழுவகற்றி
Emetic- வாந்தியுண்டாக்கி
Germicide- கிருமிகொல்லி
Nervine tonic- நரம்பு உரமாக்கி
Sedative- தாபமகற்றி
Stimulant- வெப்பமுண்டாக்கி
Stomachic- பசித்தீ தூண்டி
Tonic- உரமாக்கி

தீரும் நோய்கள்-
குன்மம், இரத்த பித்தம், வாய் நாற்றம், சூலை, சந்நிபாதம், நுண்கிருமித் தொற்று, மண்ணீரல் நோய், காசம், மந்தாக்கினி, மந்தபேதி, வயிற்றுப் பொருமல், உடல் பலவீனம், வாதநோய், சொறி, சிரங்கு, முறைச்சுரம்

பயன்படுத்தும் முறைகள்-
வசம்பு ஒரு பங்கிற்குப் பத்து பங்கு கொதிக்கின்ற வெந்நீர் சேர்த்து ஊறல் கஷாயமிட்டு வடிகட்டி 20ml- 40ml வீதம் கொடுக்கப் பசியின்மை, அசீரணம், வயிற்றுப்பொருமல், பலக்கெடுதியினாலும், கொலராவினாலும் குழந்தைகளுக்குண்டாகிற பேதியை நிறுத்தும். முறைக்காய்ச்சலைத் தடுக்கும்.

வசம்புடன் அதிமதுரங் கூட்டிக் காய்ச்சிய கஷாயம் பெரும்பாலும் குழந்தைகளுக்குண்டாகிற இருமல், ஈளை, சுரம், வயிற்றுவலி இவைகளைப் போக்கும்.

வசம்புத் துண்டை வாயிலிட்டுச் சுவைக்க வாய்நீர்பெருகும். வாயில் ஓர் வித அனலெழும்பும். ஆனால், தொண்டைக்கம்மல், இருமல் இவற் றைப்போக்கும்.

வசம்புச் சூரணத்தை 400 mg- 1300 mg வரையில் உட்கொள்ள அகட்டு வாயுவை அகற்றுவதுடன் நரம்புத்தளர்ச்சியையும் விலக்கும்.

2g இற்கு மேற்பட்ட அளவில் வாய்க்குமட்டலையும், வாந்தியையுமுண் டாக்கும்.

விடக்காற்றால் நோய்கள் பரவுங்காலத்தில் இதை வாயிலிட்டு மெல்லுவது வழக்கம்.

நாட்பட்ட கீல்வாத நோய்களுக்குக் காச்சுக்கட்டியுடன் வசம்பைச் சேர்த்து நீர் விட்டரைத்துப் பற்றிடலாம்.

இதைச்சுட்டுக் கரியாக்கித் தேங்காய் நெய் அல்லது முத்தெண்ணெயுடன் கலந்து அடிவயிற்றிற் பூச வயிற்றுப் பொருமல் நீங்கும்.

சுத்தி செய்யாததும், சுத்திசெய்தும் அளவிற்கு மிஞ்சிக்கூட்டிய நேர்வாள மருந்தால், பெருமலங்கழிந்து வயிற்றுக்கடுப்பு, ஆசனக்கடுப்பு, ஆயாசமுண்டாகி பேதி நிற்காவிட்டால், மஞ்சளையரைத்து வசம்பிற்குக் கவசமிட்டு, மஞ்சள் கருகும்படிச் சுட்டு மீண்டும் இவ்வாறே 6 முறை செய்தெடுத்த வசம்பைச் சுட்டுக் கரியாக்கித் தண்ணீர்விட்டுக் கஷாயஞ் செய்து கொடுக்க மேற்கண்டபடியுண்டான பேதி நிற்கும்.

வசம்பு, காயம், அதிவிடயம், திப்பிலி, மிளகு, சுக்கு, கடுக்காய்த்தோல், இந்துப்பு இவைகளைச் சூரணஞ் செய்து சமபாகமெடுத்துக் கூட்டி 1g வீதம் உட்கொள்ள அசீரணம், சில வாத ரோகங்கள், மந்தாக்கினி, மந்தபேதி, வயிற்றுப் பொருமல் முதலியன நீங்கும்.

வலி,உன்மத்தம், சுரம் உள்ளகாலத்தில் இச்சூரணத்தை அந்தந்த நோய்க்குரிய மருந்துகளுடன் சேர்த்து உட்கொள்ள வெப்பமுண்டாக்கி (Stimulant) யாகப் பயன் தரும்.

~சூர்யநிலா

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.