லெபனான் குண்டு வெடிப்பில் பலியான அதிகாரியின் மரணச் சடங்கில் ஆர்ப்பாட்டப் பேரணி
- Sunday, 21 October 2012 16:18
பெய்ரூட் கார் குண்டு வெடிப்பில் பலியான விசாம் அல்-ஹசன் அதிகாரியின் இறுதிச் சடங்கில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த எதிரணியினர் அழைப்பு விட்டுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவுக்கு அண்மை நாடான லெபனானின் தலை நகர் பெய்ரூட்டில் மக்கள் செறிந்து வாழும் இடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 8 பேர் கொல்லப் பட்டிருந்தனர். இவர்களில் முக்கியமாக லெபனான் பாதுகாப்புப் படை மற்றும் போலிஸ் தலைமை அதிகாரியான விசாம் அல்-ஹசன் என்பவரும் கொல்லப் பட்டிருந்தார்.
இதையடுத்து இன்று ஞாயிறு நண்பகல் நடைபெறவுள்ள அவரது மரணச் சடங்கில் லெபனானின் எதிரணியினர் மிகப் பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்று கூடுமாறு பொது மக்களிடம் அழைப்பு விடுவித்துள்ளனர். இதனையடுத்து சிரியாவில் இடம்பெறும் மக்கள் யுத்தம் போல் லெபனானிலும் தொடங்கலாம் என்ற அச்சம் பொது மக்களிடையே பரவியுள்ளது. நேற்றிரவு லெபனானின் அரசு பதவி விலக வேண்டும் எனக் கோரி அதன் தலைநகரான பெய்ரூட்டில் கிளர்ச்சியாளர்கள் பாதைகளை மறித்தும் டயர்களை எறித்தும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிரியாவில் கிளர்ச்சி நடத்தும் சுன்னி முஸ்லிம்கள் அங்கு அதிகளவு இருப்பது போல் மிகச் சிறிய நாடான லெபனானிலும் உள்ளனர். இதனால் எச்சமயத்திலும் லெபனானில் ஆட்சி நடத்தி வரும் ஷைட்டி முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். சுன்னி பிரிவைச் சேர்ந்த 47 வயதேயான இராணுவ தலைமை அதிகாரியின் கொலைச் சம்பவம் போன்றவை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வன்முறையை தூண்ட வல்லது.
2005 ஆம் ஆண்டு இதே போன்று பெய்ரூட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் லெபனானின் முன்னால் பிரதமர் ராபிக் ஹரிரி கொல்லப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
