பாலிவுட்டின் அனுபவமிக்க இயக்குனர் யாஷ் சோப்ரா மரணம்
- Sunday, 21 October 2012 16:41
பாலிவுட் திரையுலகின் அனுபவமிக்க படத் தயாரிப்பாளரும் திரையாசிரியரும், இயக்குனருமான யாஷ் சோப்ரா இன்று திடீரென மரணமடைந்துள்ளார்.
80 வயதாகும் 'யாஷ் சோப்ரா' மும்பையின் பன்ட்ரா நகரிலுள்ள லீலாவதி வைத்தியசாலையில் இருந்து சில நாட்கள் முன் வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை திடீரென அவர் மரணமடைந்துள்ளார்.
இவர் ஒக்டோபர் 13 ஆம் திகதி டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப் பட்ட காரணத்தால் மேலே குறிப்பிட்ட வைத்திய சாலையில் சேர்க்கப் பட்டதாக உத்தியோகபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சமீபத்தில் இயக்கிய ஷாருக்கான் நடித்திருக்கும் 'ஜப் டக் ஹய் ஜான்' எனும் திரைப்படம் வெளியாகும் முன்னரே பரிதாபமாக மரணடைந்துள்ளார்.
1973 ஆம் ஆண்டு தனது திரைப்படம் தயாரிக்கும் நிறுவனமான 'யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்' ஐ ஆரம்பித்து இன்று வரை பல வெற்றிப் படங்களை அதன் மூலம் கொடுத்துள்ளார். மிகச் சிறந்த காதல் படங்களையும், ஆக்சன் நாடகங்களையும் இவர் தயாரித்துள்ளார். இந்நிலையில் இவர் டெங்கு நோயால் நீண்ட காலம் பாதிக்கப் பட்டிருந்ததாகவும் இதனால் இவரின் பல உடலுறுப்புக்கள் செயலிழந்தது மரணத்தைத் தழுவ நேரிட்டது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இவர் இயக்கிய திரைப்படங்களில் அமிதாப் பச்சனின் முக்கிய திரைப்படமான டீவார் (Deewar), த்ரிசூல், ச்சான்ட்னி, சில்சிலா, மற்றும் ஷாருக்கானின் வீர் ஷாரா ஆகியவை மிகப் பிரசித்தமானவை ஆகும். சோப்ரா, பமீலா என்பவருடன் மண வாழ்க்கையில் இணைந்திருந்ததுடன் இவருக்கு ஆதித்யா, உதய் எனும் இரு மகன்களும் உள்ளனர்.

.jpg)